20 ஆண்டுகளை கடந்துள்ள ஆயுத எழுத்து


கடந்த 2004 ஆம் ஆண்டு  மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்தப் படம் ஆயுத எழுத்து. இன்று பரவலாக இப்படம் ரசிக்கப் பட்டாலும்  மணிரத்னத்தின் தோல்வியை சந்தித்தப் படங்களில் ஒன்று. இன்று அந்தப் படம் வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்துள்ளன. மூன்று வெவ்வேறு விதமான காதல் கதைகள் , திரைக்கதையில் புதுமையான முயற்சி என இப்படத்தில் மணிரத்னம் மிளிர்ந்த சில தருணங்களும் உண்டு.


கதை சொல்லல் முறை


இப்படத்தின் திரைக்கதை  இனாரிட்டூவின் அமரோஸ் பெரோஸ் படத்தின்  திரைக்கதை வடிவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஒரு முயற்சி. இன்று பல திரைப்படங்கள் இந்த முறையில் வெளிவருகின்றன. ஆனால் 2004 ஆம் ஆண்டு மணிரத்னம் இதை முயற்சித்து வந்திருக்கிறார். மொத்தம் மூன்று கதாபாத்திரங்கள் சூர்யா, சித்தார்த், மாதவன். வெவ்வேறு வாழ்க்கை போக்கை கொண்ட இந்த மூன்று கதாபாத்திரங்களின் கதைகள் தனித்தனியாக சொல்லப்பட்டு பின் மூவரின் வாழ்க்கையும் ஒரே புள்ளியில் இணைகின்றன.


ஒரே நாயகனை படம் முழுவதும் பார்த்து பழக்கப்பட்ட தமிழ் ரசிகர்களுக்கு பரோட்டாவை பிச்சுப் போட்ட மாதிரியான ஒரு கதைசொல்லல் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். மணிரத்னம் சமீபத்தில் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தின் காட்சியமைப்புகள் ஆயுத எழுத்து படத்தை பல இடங்களில் நினைவுபடுத்துவதை ரசிகர்கள் கவனித்திருக்கலாம்.


மூன்று காதல்கள்


ஆயுத எழுத்து திரைப்படத்தில் மொத்தம் மூன்று காதல் கதைகள் இடம்பெறுகின்றன. முதலில் த்ரிஷா மற்றும் சித்தார்த்துக்கு இடையிலான காதல். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண்ணான மீரா (த்ரிஷா) அமெரிக்கா செல்ல துடிக்கும்  அர்ஜுனை (சித்தார்த்தை) சந்திக்கிறார். இருவரும் விளையாட்டாக தொடங்கி மீராவின் மேல் காதல் வயப்படுகிறார் அர்ஜுன்.


மற்றொரு பக்கம் மைக்கேல் - கீதாஞ்சலி (சூர்யா - ஈஷா தியோல்) ஆகிய இருவருக்கும் இடையிலான காதல் ஒரு லட்சியவாதியாக இருக்கும் மைக்கேலை அவரை அப்படியே ஏற்றுகொள்ளும் ஈஷா தியோல்.


இன்பா மற்றும் சசிக்கு (மாதவன், மீரா ஜாஸ்மின்) இடையிலான காதல் தான் முந்தைய இரண்டு காதல்களை விட அதிக அர்த்தம் பெறும் ஒரு காதல். இன்பா மற்றும் சசி திருமணம் செய்து கொள்கிறார்கள். இன்பா ஒரு ரவுடியாக இருக்கிறான். அவனை இந்தத் தொழிலை விடச்சொல்லிக் கேட்டுகொள்கிறார் சசி. இதற்காக இருவருக்கு இடையில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்கின்றன. ஒரு உயிரை கொல்வதற்கான வலியை இன்பாவிற்கு உணர்த்த தனது சொந்தக் குழந்தையை கலைக்கிறார் சசி. இந்தக் காட்சியில் மாதவனின் நடிப்பு அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்று.


இப்படிப்பட்ட இந்த படத்தில் பாரதிராஜா ஒரு எதிர்மறை கேரக்டரில் அசத்தலாக நடித்திருப்பார். அதேபோல் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அடிப்படையிலும் கதையை மணிரத்னம் நகர்த்தியிருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒவ்வொரு பாடலும் மாஸாக கம்போஸ் செய்யப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட பல சிறப்புகள் அடங்கிய ஆய்த எழுத்து படத்தை அன்றைய காலத்தில் கொண்டாடாமல் இன்றைக்கு கொண்டாடி என்ன பயன்?