தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலை முதலில் சந்தித்த அனுபவம் குறித்தும், அவரிடம் முதலில் ஆட்டோகிராப் வாங்கிய அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார்.


கமலின் மிகத்தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து தற்போது இயக்கி இருக்கும் திரைப்படம்  ‘விக்ரம்’. இந்தப்படத்தின் ப்ரோமோஷனுக்கான நேர்காணல் ஒன்றில் அவர் இந்த அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.


கை காலே ஓடல.


அதில், “மாநகரம் படம் மார்ச் 10 ரிலீஸ் ஆச்சு. மார்ச் 14 எனக்கு பிறந்தநாள். அன்னைக்கு என்னோட ஃப்ரண்ட், ஜட்ஜ் ஒருத்தரை மீட் பண்ணனும்னு சொல்லி என்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனான். அங்க போறவரைக்கும் எனக்குத் தெரியாது அது கமல் சாரோட வீடுனு. அங்க இருக்குற போட்டோவை வச்சுதான் கடைசில கண்டுபிடிச்சேன். அத ரியலைஸ் பண்ணி முடிக்கிறதுக்குள்ள கமல் சார் வந்துட்டார். அவரை பார்த்த 10 நிமிஷம் எனக்கு பேச்சே வரல.


 



அதுக்கப்புறமா விக்ரம் படம் கமிட் ஆகி படம் பண்றோம் முடிவான போது பார்த்து பேசினோம். அதுக்கப்புறமா படம் சைன் பண்றதுக்காக இந்தியன் 2 செட்ல கமல் சாரை மீட் பண்ண போயிருந்தேன். அப்ப கமல் சார் இந்தியன் 2 மேக்கப்ல இருந்தாரு. அவர் வந்ததும் எனக்கு கை காலே ஓடல. அவர் ப்ரோடியுசர் பேருக்கு கீழே சைன் பண்ணாரு. நான் டைரக்டர் பேரு கீழே சைன் பண்ணேன். அவர் கிட்ட ஆட்டோகிராப் வாங்கனும்ணு ஆசைப்பட்டுருக்கேன். ஆனா இப்படி ஆட்டோகிராப்  வாங்குவேன்ணு நினைக்கல.” என்று பேசினார்.


தனித்துவமான திரைக்கதை 


மாநகரம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது அழுத்தமான திரைக்கதை மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து கார்த்தியுடன் கைகோர்த்த லோகேஷ் கைதி படத்தை இயக்கினார். ஆக்‌ஷன் படமாக உருவாகியிருந்த இந்தப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை இயக்கிக்கொண்டிருந்த போதே, அவருக்கு விஜய்க்கு கதை சொல்ல வாய்ப்பு  கிடைத்த நிலையில், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட லோகேஷ்  ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். 


கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தனது தனித்துவமான திரைக்கதையால் பல முன்னணி இயக்குநர்களின் பாராட்டைப் பெற்ற லோகேஷூக்கு தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.