நான் சினிமாவுக்குள் நுழைவது பற்றி பேசியபோது என் குடும்பத்தினர் மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்ததாக இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேரனும், முதலமைச்சர் ஜோசப் விஜயின் மகனுமான ஜேசன் சஞ்சய் “சிக்மா” என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜயின் ஜனநாயகன் படம் ஜூலை 23ம் தேதி ரிலீசாவதால் ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளது.
இப்படியான நிலையில் ஊடகம் ஒன்றிற்கு ஜேசன் சஞ்சய் நேர்காணல் அளித்துள்ளார். அதில் பேசிய அவர், “ அடிப்படையில் நான் ஒரு திரைப்படக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் மிகச் சிறு வயதிலிருந்தே படப்பிடிப்புத் தளங்களுக்குச் செல்வது வழக்கம். நான் பல திரைப்படங்களை பிரீமியர் காட்சிகளில் பார்த்திருக்கிறேன். மேலும் திரைப்படங்களைப் பார்ப்பது எப்போதுமே எனது மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்து வருகிறது.
நான் சினிமாவுக்குள் நுழைவது குறித்து எனது பெற்றோர், சகோதரி மற்றும் நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் அனைவரும் மிகவும் நேர்மறையாக பேசி எனக்கு மிகுந்த ஊக்கமளித்தனர். அப்போதுதான் அவர்கள் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நான் உண்மையாக உணர்ந்தேன். அதேசமயம் சிக்மா படப்பிடிப்பு தொடங்கியபோது, விஜய்சேதுபதி மற்றும் சூரி ஆகியோரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர் என கூறியுள்ளார்.
Also Read: பெண் தோழிகளுக்காக ரயிலில் சண்டை போட்ட முதல்வர் விஜய்.. நினைவுகளைப் பகிர்ந்த சஞ்சீவ்!
தொடர்ந்து பேசிய ஜேசன் சஞ்சய், “உலகம் முழுவதும் வெளியாகும் எல்லா வகை திரைப்படங்களையும் நான் பார்த்து ரசிப்பேன். நான் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அதன் கதை சொல்லப்படும் விதம் அது எங்கிருந்து தொடங்கி முடிகிறது, எப்படி விவரிக்கப்படுகிறது என்பவற்றை மிகவும் கவனமாகக் கவனிப்பேன். அது ஒரு புதிரை விடுவிப்பது போன்ற உணர்வைத் தரும். ஒரு படத்தைப் பார்த்த பிறகு அதைப் பார்க்காத என் நண்பர்களிடம் கதையை உற்சாகமாக விவரிப்பேன். அநேகமாக அங்கிருந்துதான் கதை சொல்லும் என் ஆர்வம் தொடங்கியது என நினைக்கிறேன்.
நான் இயக்குநராக முடிவு செய்த என் வயதைக் கருத்தில் கொண்டு, நான் ஒரு காதல் கதையைத்தான் உருவாக்குவேன் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், இரண்டு பேரை மையமாகக் கொண்ட ஒரு காதல் கதையை உருவாக்குவதற்குப் பதிலாக, ஒரு கும்பலை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் படத்தை எடுக்க நினைத்தி சிக்மாவை உருவாக்கியுள்ளேன்.
பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ்புத்ரன் என்னை அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க அணுகினார். எனக்கு சுமார் 20 வயது தான் ஆகியிருந்தது. நான் படித்துக் கொண்டிருந்ததால் அதனை மையமாகக் கொண்ட ஒரு கதையை எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில், சினிமாவில் நுழையும் எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு எது நன்றாக வரும் என்பதைக் கண்டறியும் முயற்சியில் நான் இருந்தேன். அதனால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை. மேலும் அவரின் கதையை முழுவதும் கேட்ட பிறகு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்பது சரியாக இருக்காது. இருந்தாலும் தன் படத்துக்கு என்னை நினைத்ததை நான் உண்மையாகவே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். சிக்மா ரிலீசான பிறகு நடிப்பு பற்றி யோசிப்பேன் என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் அப்பாவின் இடத்தை படிப்படியாக பிடிக்க இப்போது இருந்தே ஜேசன் சஞ்சய் திட்டமிட்டு வருகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிக்மா படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
