கல்லூரியில் இருந்து சுற்றுலா சென்ற இடத்தில் ரயிலில் தற்போதைய முதலமைச்சர் விஜய் போட்ட சண்டை ஒன்றை அவரது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் பகிர்ந்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நாங்க எல்லாரும் காலேஜில் இருந்து சுற்றுலா சென்றோம். அப்போது நான் ஒரு பெண்ணை காதலித்தேன். நானும் அந்த பெண்ணும் வேறு வேறு கோட்சில் அமர்ந்திருந்தோம். ரயில் புறப்பட்டதும் சரி, அந்த பெண்ணுடன் போய் உட்காரலாம் என சென்றால் என் நண்பர்கள் எல்லாரும் அவருடன் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அதைப் பார்த்ததும் இதயமே நொறுங்கி விட்டது. ஜாலியாக சென்று கொண்டிருந்த நிலையில் ரயிலானது மகாராஷ்ட்ராவில் ஜல்னா என்ற ரயில் நிலையத்திற்கு சென்றது.
ஏதோ டமால் டூமில் என்று ஒரே சத்தமாக இருந்தது. என்ன நடக்கிறது என புரியவில்லை. என்னுடைய தோழன் ஒருவர் அங்கிருந்து ஓடி வருகிறான். அதற்கு முன்னால் ரயில் முந்தைய ஸ்டேஷனில் நிற்கும்போது யாரோ இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் சண்டை போட்ட நபர் நாங்கள் இருந்த கோட்சில் இருந்து இறங்கியதைக் கண்ட மற்றொரு நபர், தனக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி எங்கள் பெட்டி எண்ணையும் தெரிவித்திருக்கிறார்.
கிட்டதட்ட 60,70 பேர் உருட்டுக்கட்டைகளுடன் வந்தார்கள். நாங்கள் படித்த விஸ்காம் துறையில் இருபாலர் என்பதால் எங்களுடன் அந்த சுற்றுலாவிற்கு பெண்களும் வந்திருந்தார்கள். அப்போது எங்களுக்கு 17,18 வயது தான் ஆனதால் என்ன நடக்கிறது என புரியவில்லை. வந்தவர்கள் எங்களை அடிக்கிறார்கள். மேல் பெர்த்தில் இருந்த விஜய் இரு இருக்கையின் மேல் கையை வைத்து எங்களை அடிக்க வந்த ஒருவரை படத்தில் வருவது போல ஓங்கி ஒரு மிதி விட்டார். அவ்வளவு தான் அந்த நபர் கீழே விழுந்து திரும்ப வருவதற்குள் நாங்கள் அங்கிருந்து வேறு இடத்திற்குள் சென்று பதுங்கி விட்டோம். அடுத்த ரயில் நிலையத்தில் போலீசார் வந்து விட்டார்கள்.
Also Read: விஜய்க்கு த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. மலையாள நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
அது வாழ்வா, சாவா சூழலாக இருந்தது. எங்களுக்கு தைரியம் இருந்தாலும் சண்டைக்கு சென்றதில்லை. எங்களைக் காப்பாற்றிக் கொள்ள விஜய் சண்டை செய்தார். நான் எனக்கு தெரிந்த அளவில் அனைவரையும் தள்ளி விட்டேன்” என தெரிவித்துள்ளார்.
அதேசமயம் உணவைப் பொறுத்தவரை கொஞ்சமாக இருந்தாலும் சுவையாக இருக்க வேண்டும் என நினைப்பவர். ஷூட்டிங் எந்த ஊருக்கு சென்றாலும் அந்தந்த ஏரியாவில் சின்ன ஹோட்டலாக இருந்தாலும் வாங்கி சாப்பிடுவார். அதேசமயம் லயோலா கல்லூரியில் படிக்கும்போது எங்களிடம் பணம் இருக்காது. விஜயிடம் கூட பணம் இருக்காது. எங்களுக்கு சீனியர்ஸ் தான் வாங்கி தருவார்கள் என சஞ்சீவ் நேர்காணலில் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
