கனடாவில் தியேட்டரில் கேஷியராக வேலைப் பார்த்த கதையை இயக்குநர் ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இயக்குநரின் சிக்மா படம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் “சிக்மா”. இந்த படத்தில் சந்தீப் கிஷன், மரியா அப்துல்லா,  ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படம் முதலில் ஜூலை கடைசியில் வெளியாவதாக இருந்தது. ஆனால் விஜயின் ஜனநாயகன் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் இந்த படம் தள்ளி வைக்கப்பட்டது. 

இதனிடையே சிக்மா படத்துக்காக ஜேசன் சஞ்சய் பல நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார். அதில் ஒரு நேர்காணலில் கனடாவில் தான் வேலை பார்த்த நிகழ்வை பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

அந்த நேர்காணலில், “நான் படிப்பு முடித்து விட்டு சில விளம்பர ஏஜென்ஸிகளிடம் வேலைப் பார்த்துள்ளேன். லிங்க்ட் -இன் வெப்சை மூலம் அந்த நிறுவனங்களைத் தொடர்புக் கொண்டு நான் இந்த கல்லூரியில் படிக்கிறேன். உங்க விளம்பரங்களைப் பார்த்தேன். நாம் இணைந்து விளம்பரங்களை உருவாக்கலாம் என சொல்லுவேன். அப்படியாக நான் ஃப்ரீலான்சிங் பண்ணினேன். ஆனால் முதல்முறையாக நான் பார்த்த வேலைக்கு சம்பளம் வாங்கியது எதுவென்றால், கனடாவில் Carlton Cinemas என்ற தியேட்டர் டொரோண்டாவில் உள்ளது. அந்த தியேட்டரில் கருப்பு - வெள்ளைப் படங்கள் தான் அதிகமாக திரையிடுவார்கள்.

சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற படங்கள் தான் திரையிடப்படும். ரொம்ப அரிதாகவே லேட்டஸ்ட் ஆக வெளியாகும் படங்கள் ரிலீசாகும். மிகவும் சிறிதான தியேட்டர் என்பதால் அங்கு நான் கேஷியராக பணியாற்றினேன். எனக்கு படங்கள் பார்ப்பது தானே பொழுதுபோக்கு என்பதால் வேலை பார்த்தால் இலவசமாக படம் பார்க்கலாம் என நினைத்தேன். 

சில நேரங்களில் யாருமே படம் பார்க்க வர மாட்டார்கள். தியேட்டர் மூடப்பட்டது என போர்டு வைத்து விட்டு நான் தனியாக போய் படம் பார்ப்பேன். அதுதான் என்னுடைய முதல் சம்பளம். அந்த அனுபவமும் மிகச் சிறப்பானது என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். 

விஜய் முதலமைச்சராகி 3 மாதங்கள் தான் ஆகிறது. அதற்கு முன்னால் அவர் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். அப்படியிருந்தும் எதையும் எதிர்ப்பார்க்காமல் தன்னுடைய சொந்த முயற்சியின் மூலம் முன்னேறிய ஜேசனுக்கு பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.