டெவில்


மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயமோகன், தேவிபாரதி, இயக்குநர்கள் வெற்றிமாறன், பாலா, கதிர், மிஷ்கினுக்கு குருவாக இருந்து இசை கற்றுத் தரும்  இசை மேதை பீம்சென் ஜோஷி சிஷ்யரான 90 வயது  நிரம்பிய இசை பண்டிதர் ராமமூர்த்தி ,இயக்குநர் வின்சென்ட் செல்வா , அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர் தானு. இயக்குநர் கருணாகரன்,  இயக்குநர் சசி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.


 இயக்குநர் வெற்றிமாறன்


இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, “மிஷ்கின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். அவரோட பெரும்பாலான திரைப்படங்கள், மனிதர்களின் இருண்மை சூழ்ந்த மனதிற்குள் ஆழ்ந்து சென்று அதில் ஒளியை தேடுவதற்கான பயணமாகத் தான் இருக்கும். அதைப் போலத் தான் அவரின் இசையும் இருக்கிறது.  “Journey into the darkness in the search of light” என்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது.  இசையமைப்பாளரும் இசைக் கலைஞர்களும் ஒரு மேடையின் மையத்தில் செண்டர் ஸ்டேஜ் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்ட முதல் ஆடியோ வெளியீடு இதுவாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த ஆடியோ வெளியீடு சிறப்பு வாய்ந்தது. ” 


இசைப்பயணத்தில் வெற்றியடைய வாழ்த்துக்கள்


”மிஷ்கின் பாடல்கள் பாடி அவை எந்த அளவிற்கு வைரல் ஆகியிருக்கிறது என்பதை நாம் அனைவருமே பார்த்து இருக்கிறோம். அது போல் அவருக்கு இசை மீது இருக்கும் ஆர்வமும் எல்லோரும் அறிந்ததே.  வின்சென்ட் செல்வா கூறியது போல் விஜயின் யூத் படத்தின் பின்னணி இசையில் கூட அவர் உதவி புரிந்திருக்கிறார்.  இவ்வளவு காலத்திற்குப் பிறகு இசையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அதை நம் அனைவர் முன்னால் மேடையில் அரங்கேற்றுவதற்கு ஒரு துணிச்சலும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்  தேவை. இந்த மூன்றுமே மிஷ்கினுக்கு இருக்கிறது. இதனால் தான் அவர் இதை சாதித்து இருக்கிறார்.  எனவே இந்த இசை பயணத்திலும் அவர் வெற்றியடைய வாழ்த்துகிறேன். அது போல் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்து, அவர் ஸ்டைலிலேயே ஒரு படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் ஆதித்யா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசினார்.


இயக்குநர் பாலா


இயக்குநர் பாலா பேசும் போது, “நான் என் படத்தின் பாடல் ஒலிப்பதிவிற்காக இளையராஜாவிடம் போயிருந்தேன். அப்பொழுது இளையராஜா மிஷ்கினைப் பற்றி சொன்ன ஒரு விசயம் எனக்கு ஞாபகம் வருகிறது. அப்பொழுதெல்லாம் எனக்கு மிஷ்கின் யார் என்றே தெரியாது. அவர் எடுத்த படத்தைப் பற்றியும் தெரியாது. ஒரு ஷார்ட்ஸ் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஷூ மற்றும் டீ-சர்ட் போட்டுக் கொண்டு, துறுதுறுவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தார் ஒருவர். அவர் போனதும், நான் இளையராஜாவிடம் யார் அது…? ஷார்ட்ஸ் ஷூவைப் போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் அலைவது என்று கேட்டேன். அதற்கு இளையராஜா, அவன் தான் மிஷ்கின், அவனை சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே அவன் மிகப்பெரிய Intellectual (இன்டெல்சுவல்) என்று கூறினார். அவர் எந்த கோணத்தில் அப்படி கூறினார் என்று தெரியாது. ஆனால் உண்மையாகவே மிஷ்கின் ஒரு இண்டெலக்ஷுவல் தான்.  அவனைப் பார்க்கும் போது ஒரு டெவில் போலத்தான் இருக்கிறான். நான் என்னுடைய போனில் அவன் நம்பரைக் கூட Wolf (வுல்ஃப்) என்று தான் பதிவு செய்து வைத்துள்ளேன். 


மிஸ்கின் முன்னால் நான் ஒன்றுமே இல்லை


வணங்கான் படத்தில் உதவி இயக்குநராக இல்லை, இயக்குநராகவே நடித்துள்ளான். அவன் நடிக்கின்ற காட்சியை அவனையே இயக்கச் சொல்லிவிட்டேன்.  இயக்கி முடித்ததும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். அது வித்தியாசமான முறையில் சிறப்பாக வந்திருந்தது. நான் ஓகே என்று கூறிவிட்டேன். ஆனால் மிஷ்கின் நீங்கள் மீண்டும் ஒரு முறை ஓகே வா என்று பார்த்து சொல்லுங்கள் என்றான். எனக்கு இவன் ஏன் இப்படி சொல்லுகிறான் நன்றாகத் தானே வந்திருக்கிறது என்று சந்தேகம் தோன்றியது. நான் மீண்டும் பார்த்தேன். அந்தக் காட்சியில் ஒரு 20 நடிகர்கள் இருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் இவன் தன் கூலிங் க்ளாஸை கழட்டி விட்டு, தலையை குனிந்து கொண்டு கையை கட்டி நிற்க வேண்டும். அப்படி நிற்கும் போதே கூட்டத்தில் ஒரு பெண் கண் சிமிட்டுவது கேமராவைப் பார்ப்பதைப் போல் இருப்பதை கவனித்து விட்டுத்தான் என்னிடம் மீண்டும் பார்க்கச் சொல்லி இருக்கிறான் என்று புரிந்தது. எனக்கு ஒரு வாரம் தூக்கமே வரவில்லை. இவன் எப்படி இந்த சிறிய பிழையைக் கூட கண்டுபிடித்தான், நாம் எப்படி அதை தவறவிட்டோம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். உண்மையாகவே மிஷ்கினுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை என்று தெரிவித்தார்.