நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார். 


ஆதம்பாவா இயக்கத்தில் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் “உயிர் தமிழுக்கு”. இந்த படத்தில் அமீர், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்து படக்குழுவினரை பாராட்டினார். பின்னர் அமீரும், சீமானும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது பேசிய அமீர், நீட் தேர்வு பற்றி சில கருத்துகளை கூறினார். அதாவது, “என்னோட பொண்ணு 2 வருடம் முன்னாடி நீட் தேர்வு எழுத போனாள். அவள் புர்கா அணிந்திருந்த நிலையில் அதனை தேர்வு எழுதுவதற்காக கழட்ட சொன்னார்கள். ஆனால் உன் நீட் தேர்வே வேண்டாம் என என் மகள் வீட்டுக்கு வந்துவிட்டாள். ஏனென்றால் ஆடை, கம்மல், கழுத்தில் இருக்கும் செயினில் எல்லாம் எதாவது வைக்க முடியும் என சொல்வது மாணவ, மாணவியர்களின் மனநிலையை பாதிக்கக்கூடிய விஷயம். ஒரு அச்சமூட்டி உள்ளே அழைத்து கொண்டு போவது போல உள்ளது” என தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து பேசிய சீமான், நானும் அமீரும் நீட் தேர்வு எழுதுகிறோம். அமீர் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தோற்றால் அவரை தகுதியில்லை என முடிவு செய்து கொள்வீர்களா?. அப்ப 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எதற்கு? நேரடியாக நீட் தேர்வு வைத்து விடலாமே?.. மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பேராசியர்கள் பழைய பாட திட்டத்தில் படித்தவர்கள். நீட் எழுதி வந்தவர் இல்லை. அதே பாடத்திட்டம் தான் இன்னும் இருக்கிறது. 


இப்படி இருக்கும்போது தரமான மருத்துவம் எப்படி வரும்?.. தரமான மருத்துவர்கள் எப்படி உருவாவார்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 


மேலும், நீட் தேர்வை ஏன் அமெரிக்க நிறுவனம் நடத்துகிறது? - அதற்கு பயிற்சி கொடுப்பது தனியார் நிறுவனம் என்றால் அதில் கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது. இந்த கேள்விகளை எல்லாம் நீட்டை ஆதரித்த பெருமக்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது. தமிழ்நாட்டில் எத்தனை பேர் மோசடி செய்து பிடிபட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். வட இந்தியாவில் 50 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 


இந்திய நாட்டில் தரமான மருத்துவ மாணவர்களை உருவாக்க ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு என்ன தேவை இருக்கிறது என தெரியவில்லை. தேர்வு கூட அரசால் நடத்த முடியவில்லையா?. தமிழ்நாட்டில் மட்டும் தான் துப்பாட்டா, அணிகலன்களுக்கு தடை, உள்ளாடைகள் சோதனை, தலைமுடியை கலைத்து விடுவது என மாணவ, மாணவியர்களின் மனநிலையை பாதிக்கும் சோதனைகளை நடத்துகிறார்கள். வட இந்தியாவில் எல்லாம் அப்படி கிடையாது” என சீமான் கூறியுள்ளார்.