திருச்சிற்றம்பலம் படத்தை முழுவதுமாக பார்த்த நடிகர் தனுஷ் என்ன சொன்னார் என்பதை அப்படத்தின் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தனுஷ் நடித்த  யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்  4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் ஆடுகளம், படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 4வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். 






கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நேற்று முன்தினம் முதலே தியேட்டர்கள் திருவிழாகோலம் பூண்ட நிலையில் நேற்று படம் பார்த்த ரசிகர்கள் பலரும் திருச்சிற்றம்பலம் படத்தில்  படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளதாகவும், நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி  பார்த்த அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறினர். குறிப்பாக தனுஷின் தோழியாக வரும் நித்யா மேனனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படி ஒரு தோழி நமக்கில்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்துள்ளது. 


இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ள மித்ரன் ஆர்.ஜவஹர் திருச்சிற்றம்பலம்  படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் தனுஷின் கர்ணன் படத்தின் படப்பிடிப்பின் போது இந்த படத்தை கதையை நான் சொன்னேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் விவாதித்து முழுக்கதையாக மாற்றினோம். செல்வராகவன் உடன் பணியாற்றிய சமயத்தில் இருந்து தனுஷை தெரியும். அவருக்காக என நான் கதை சொன்னதே இல்லை. எல்லாமே தானாக அமைந்தது தான் என மித்ரன் தெரிவித்துள்ளார். 


தனுஷ்  இந்த படத்தை மிக்ஸிங் ஒர்க்கின் போது  பார்த்தார். பொதுவாக அவர் எந்த படத்தையும் பார்த்து விட்டு நல்லா இருக்கு, இல்லை என உடனே சொல்ல மாட்டார். அவரின் ரியாக்‌ஷன் வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் திருச்சிற்றம்பலம் படம் தனுஷூக்கு மிகுந்த திருப்தி தான் என மித்ரன் ஆர். ஜவஹர் கூறியுள்ளார்.