மகாசிவராத்திரி தினத்தன்று நடிகர் தனுஷ்  போயஸ் கார்டனில் கட்டிய புது வீட்டுக்கு குடியேறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, பொல்லாதவன், ஆடுகளம், 3, அசுரன்,வடசென்னை, கர்ணன் என நடிப்பை அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலான படங்களில் நடித்தார்.  நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவின் பன்முக கலைஞராக திகழும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் என எதையும் விட்டுவைக்காமல் தனது முத்திரையை பதித்துள்ளார். 


இதனிடையே 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட தனுஷ். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், தனுஷ் -ஐஸ்வர்யா இருவரும் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டி வருகின்றனர். இருவரது சமூக வலைத்தளப்பக்கத்திலும் மகன்களோடு இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி நாம் காணலாம். 


அப்படியான தனுஷ்  போயஸ் கார்டனில் வீடு ஒன்றை வாங்க கட்ட விரும்பினார். இதற்காக இடம் வாங்கி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் சகிதம் கலந்து கொண்டனர். அதேசமயம் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் பங்கேற்றார். இதன்  புகைப்படம் அன்றைய தேதியில் செம ட்ரெண்டானது. 


இதற்கிடையில் விவாகரத்துக்குப் பின் படங்களில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் நடிப்பில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 17) வாத்தி படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே கேப்டன் மில்லர் படத்தில் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது கெட்டப்பை மாற்றியுள்ளார். நீண்ட தாடியுடன் அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்தது. 


இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். பல வசதிகளுடன் கூடிய இந்த வீட்டைப் பற்றி இயக்குநர் சுப்பிரமணிய சிவா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தம்பி தனுஷின் புதிய வீடு கோவில் உணர்வு எனக்கு... வாழும் போதே தாய்,தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணர படுகிறார்கள்... மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள்.. வாழ்க தம்பி” என கூறியுள்ளார். அதேசமயம் ரஜினி குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுள்ளார். என்னதான் இருந்தாலும் ரஜினியும் - தனுஷூம் பங்கேற்ற நிகழ்ச்சி என பழைய புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.