பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்  கடந்த காலத்தை போல வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 


நாகை மாவட்ட ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்   ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாநிலத் தலைவருமான அன்பரசு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்திகளிடம் பேசிய அவர்: திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்  தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான அரசு ஊழியர் ஆசிரியர்கள் பணியாளர்கள் நம்பிக்கை இழந்து  வாழ்வாதார உரிமை மீட்புக்கான போராட்டத்தை அறிவிக்கக்கூடிய மாநாடாக தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருவதாகவும், ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பேசிய முதல்வர் பத்து மாதம் பொறுக்க முடியாத என கேள்வி எழுப்பிய நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அரசு ஊழியர்களின் வாழ்வாதார உரிமைகள் ஒன்றும் மீட்கப்படாத நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், தங்களது கோரிக்கைக்காக தொடர்ந்து 30 ஆண்டுகாலம்  சத்துணவு   அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போராடி வருவதாகவும், ஆசிரியர்களை ஆசிரியர்களாக மதிக்காமல் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்குவது போல் மற்ற பணிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.



 

மேலும், கடந்த காலங்களில் உரிமைகளை போராடி பெற்ற நிலையில் தற்போது உள்ள திராவிட மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர் எண்ணிக்கையை 14 லட்சத்திலிருந்து ஏழு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும்,  ஜாக்டோ ஜியோவின்னரின் எண்ணமும் தமது எண்ணமும் ஒன்றாக உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். ஆனால் தமிழக நிதி அமைச்சரின் எண்ணம் மாறாக  உள்ளது என்றார். அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக கூட அமைச்சரை நேரில் சந்திக்க முடியாத நிலை உள்ளதாகவும்,  வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் டி என் பி சி மூடிவிட்டு தனியார் ஏஜென்சியை உருவாக்க நிதியமைச்சர் முயற்சி செய்து வருகிறார் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என கேள்வி எழுப்பினார். இந்திய முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் தமிழகத்தில் 30 ஆயிரம் முன்னாள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசாங்க அனாதைகளாக பென்ஷன் இல்லாமல் தவிர்த்து வருகின்றனர் என்றார்.

 

அரசு ஊழியர் ஆசிரியர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்த அவர், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச் 5 தேதி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும் 20 ஆண்டுகள் இழந்த உரிமைகளை மீட்பதற்கு தமிழகம் முழுவதும் இருபதாயிரம் கிலோ மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் எனவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கடந்த காலத்தை போல வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழக முதல்வருக்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு எச்சரிக்கை விடுத்தார்.