தனுஷ் ரசிகர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று கலந்துகொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: 


"வெயில் அதிகமாக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்திருக்கிறார்கள், மகிழ்ச்சியான விஷயம். 


தனுஷ் உடன் படம் பண்ணுவது ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்று தான். தவிர்க்க முடியாத காரணங்களால் அதனை உடனடியாக தொடங்க முடியவில்லை. இப்போது அது தொடங்கி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. தனுஷின் வொண்டபேர் நிறுவனமே அதை செய்வதுதான் எதிர்பார்க்காத அப்டேட். துருவ் உடன் செய்யும் படத்தை முடித்து விட்டு இந்தப் படத்தை தொடங்கி விடுவோம்” எனப்  பேசினார்.


”நடிகர் வடிவேலு தனுஷ் படத்திலும் இருக்கிறாரா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு ”அது குறித்து இன்னும் முடிவாகவில்லை, தனுஷூம் நானும் தான் இப்போது படத்தில் இருக்கிறோம்” என மாரி செல்வராஜ் பதிலளித்தார்.


மேலும், “தனுஷ் உடனான இந்தப் படம் என்னுடைய கரியரில் மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும். அதனால் தான் இவ்வளவு தாமதாகிறது. இது இரு வரலாற்றுப் படம். எனக்கே ஒரு பயம் இருந்தது. இந்தப் படம் எடுக்க நான் கொஞ்சம் பக்குவப்பட வேண்டும் என நினைத்தேன்.


நான் கொஞ்சம் சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும். கர்ணனுக்குப் பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் அந்த எதிர்பார்ப்பை மட்டும் பூர்த்தி செய்யாமல், நான் அடுத்த இடத்துக்கு போக வேண்டும். அதனால் அதற்கான நேரம் தேவைப்பட்டது. தனுஷ் சார் இந்தப் படம் ஒரு பெரிய படமாக இருக்கும் என நம்புகிறார். அதனை பூர்த்தி செய்யும் படமாக இந்தப் படம் இருக்கும்” எனப் பேசினார்.


கர்ணன் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் 15ஆவது படத்தில் தனுஷ் - மாரி செல்வராஜ் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர்.


கர்ணன் திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அண்மையில் இந்த அறிவிப்பு வெளியானது. தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில், இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் மாரி செல்வராஜ் உடனான படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.