தமிழ் சினிமாவில் சர்ச்சைகளில் சிக்காத நடிகர்களே இல்லை என்று கூறலாம், ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், திரையுலகில் தங்களின் தொடக்க காலத்தில் பல விதமான சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாக அப்போது செய்திகள், தகவல்கள் எல்லாம் வெளியாகியுள்ளன. ஆனால், சர்ச்சை என்பது ஏதோ ஒன்று, இரண்டு என்று வந்தால் பரவாயில்லை, ஆனால், ஒரு நடிகன், அதுவும் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் தொடர்ந்து சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழக்கமாகி வருகிறது. அவர் வேறுயாரும் இல்லை. தேசிய விருதுகள் பெற்ற நடிகர். நடிப்பின் அசுரன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தனுஷ். 


கிண்டல், கேலிகளை ப்ளஸ் ஆக்கியவர்!


சினிமாவில் தொடக்க காலத்தில் அதிக உருவ கேலிக்கு ஆளான நடிகர் என்றால், தனுஷ் என்று பலரும் கூறுவார்கள். அவரின் ஒல்லியான தோற்றத்தை பார்த்து, மற்றவர்களை தவிர, திரையுலகினரே அதிகம் கிண்டல் செய்து நக்கலடித்தனர். ஆனால், ஒல்லியான தனது உருவத்தையே பிளஸ் ஆக்கி, தற்போது இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் சிறந்த நடிகர் என்ற இடத்திற்கு வந்துள்ளார். இவர், எந்தளவிற்கு முன்னேறி வந்திருக்கிறாரோ, அதே அளவிற்கு இவரை சுற்றி சர்ச்சையும் வந்துள்ளது.




சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்த தனுஷ், யாரும் எதிர்பார்க்காத விதமாக, இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் முதல் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்தில் முதலில் ரஜினிக்கு விருப்பமில்லை என்றும், அதன்பிறகு ஏதோ தனது குடும்பத்துக்காக அவர் ஒத்துக்கொண்டதாகவும் அப்போது பேசப்பட்டது. ரஜினியின் மருமகன் தனுஷா என்று ஏளனமாக பார்த்தனர். அதன்பிறகு, தனுஷ் சிறந்த மருமகன் என்று ரஜினியே காலா பட பாடல் வெளியீட்டில் கூறியிருந்தார். அந்த அளவிற்கு சிறந்த மாப்பிள்ளையாக நடந்து கொண்டார் தனுஷ். 




காதல் சர்சையில் தனுஷ்...


நன்றாக சென்றுக்கொண்டிருந்த தனுஷ் வாழ்க்கையில், தனது மனைவி இயக்கிய 3 படம் மூலமே தனுஷ் பெரிய சர்ச்சையில் சிக்கினார். இந்தப் படம் மூலம் சுருதி ஹாசனுக்கும், தனுஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், இதனால், தனுஷூக்கும், அவரது மனைவிக்கு பிரச்னை ஏற்பட்டதாகவும், ரஜினி இந்தப் பிரச்சனையில் தலையீட்டு சுமூகமாக பேசி தீர்த்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த சர்ச்சையால் தனுஷ் பெரியளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தார் அப்போது கூறப்பட்டது. இந்த சர்ச்சை முடிந்து சில தினங்களில், அமலாபால் விவகாரத்துக்கு காரணமே தனுஷ் தான் என்று பேசப்பட்டது. வேலையில்லா பட்டதாரி படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்திருந்தனர். இதைவைத்து, இந்த சர்ச்சை பரபரப்பட்டது.ஆனால் அவை அனைத்தும் சர்சையாகவே முடிந்தது. எந்த ஆதாரமும் வெளியாகவில்லை.




‛சுஜி’ லீக்ஸ்...


மற்றொரு சர்ச்சை, சுச்சீ லீக்ஸ் விவகாரம், இந்த விவகாரத்துக்கு பிறகு எந்தவொரு நடிகை விவகாரம் என்றாலே தனுஷ் தான் என்று பேசுமளவிற்கு தனுஷ் சர்ச்சைகளில் சிக்கி திணறினார். த்ரிஷா, தனுஷ் நெருக்கமாக இருக்கும் படம் போன்றவை சுச்சீ லீக்ஸ் மூலம் வெளியான தகவல்கள். இந்த சம்பவம் தொடர்பாக தனுஷின் சகோதரி, சுச்சீ லீக்ஸ் விவகாரத்தால், தங்களின் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


‛மெகா தலைவலி’


இப்படி பல சர்ச்சைகளில் சிக்கியிருந்த தனுஷ், அவரே எதிர்பார்க்காத வகையில், தனுஷ் தங்களின் மகன் என்று கூறி கதிரேசன் - மீனாட்சி என்ற முதிய தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் சாட்சியாக காண்பிக்கப்பட்ட புகைப்படத்தில், அச்சு அசல் தனுஷ் போலவே இருந்ததால், ஒரு கட்டத்தில் சிலர் தனுஷ் அவர்களின் மகன் தான் என்று பேசினார்கள். அதன்பிறகு, முதிய தம்பதி கூறியப்படி எந்த குறியீடும் இல்லை என்று கூறி இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனாலும் இன்றும் தனுஷ் தங்கள் மகன் என நிரூபிக்கும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று உறுதியாக நிற்கிறது கதிரேசன்-மீனாட்சி தம்பதி.


விஜய்க்கு அபராதம்... தனுஷிற்கு...?


தனுஷ் தற்போது எந்தளவிற்கு முன்னேறி கொண்டே இருக்கிறாரோ, அதே அளவிற்கு சர்ச்சையும் அவரு கூடவே வருகிறது. 2015ல் அவர் வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு பிறக்கப்பட உள்ளது. ஏற்கெனவே நடிகர் விஜய் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பிக்கிறார்.


ஏன் இது சர்ச்சை என்று கூறப்படுகிறது என்றால், இதே போன்ற வழக்கை நடிகர் விஜய் சந்தித்து சர்ச்சையில் சிக்கினார். விஜய் வழக்கில் கடும் விமர்சனைங்களை வைத்த அதே நீதிபதிதான், நாளை தனுஷ் வழக்கில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். இந்த உத்தரவில் நீதிபதியின் விமர்சனத்துக்கு ஆளாகி தனுஷ் சர்ச்சையில் சிக்குவாரா? அல்லது சர்ச்சையில் மாட்டிக்கொள்ளாமல் செல்வாரா? என்பது நாளை தெரிந்துவிடும்.