Dhanush  AI Raanjhanaa: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் திருத்தப்பட்ட ராஞ்சனா திரைப்படத்தை எதிர்ப்பை மீறி வெளியிட்டதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

AI மூலம் திருத்தப்பட்ட ராஞ்சனா க்ளைமேக்ஸ்:

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா திரைப்படத்தின் க்ளைமேக்ஸை மட்டும்,  செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் திருத்தி "மகிழ்ச்சியான முடிவு" கொண்ட வெர்ஷனாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆனந்த் எல். ராய் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலையில், தற்போது படத்தில் நாயகனாக நடித்த தனுஷும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வெர்ஷன் உண்மையாக நாங்கள் எடுத்த படத்தின் ஆன்மாவை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

தனுஷ் கண்டனம்:

தனுஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்ட க்ளைமாக்ஸுடன் கூடிய RAANJHANAA படத்தின் மறு வெளியீடு என்னை முற்றிலும் தொந்தரவு செய்துள்ளது. இந்த மாற்று முடிவு படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டது, மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் எனது தெளிவான ஆட்சேபனையை மீறி அதைத் தொடர்ந்தனர். இது 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட படம் அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

தனுஷ் கோரிக்கை:

தொடர்ந்து, “திரைப்படங்கள் அல்லது கதையை மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது கலை மற்றும் கலைஞர்கள் இருவருக்கும் மிகவும் கவலையளிக்கும் ஒரு முன்னுதாரணமாகும். இது கதைசொல்லலின் நேர்மையையும் சினிமாவின் மரபையும் அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நான் மனதார நம்புகிறேன்” என நடிகர் தனுஷ் வலியுறுத்தியுள்ளார்.

இயக்குனர் சொல்வது என்ன?

"மகிழ்ச்சியான முடிவை" பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய கிளைமாக்ஸுடன் ராஞ்சனாவை மீண்டும் வெளியிடுவதாக ஈரோஸ் இன்டர்நேஷனல் அறிவித்தது முதலே அதற்கு கடும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. நீரஜ் பாண்டே, கபீர் கான், கனிகா தில்லான், வருண் குரோவர், ரேணுகா ஷஹானே, மற்றும் தனுஜ் கார்க் உள்ளிட்ட பல திரைப்பட தயாரிப்பாளர்கள் இயக்குனர் ஆனந்த் ராய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, இந்த முடிவை "நெறிமுறையற்றது" என்று விமர்சித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆனந்த் எல் ராய் பேசுகையில், “கடந்த மூன்று வாரங்கள் யதார்த்தமானவை மற்றும் மிகவும் வருத்தமளிக்கின்றன. அக்கறை, மோதல், ஒத்துழைப்பு மற்றும் படைப்பாற்றல் ஆபத்திலிருந்து பிறந்த ராஞ்சனா திரைப்படத்தை, எனது ஆலோசனை அல்லது ஒப்புதல் இல்லாமல் மாற்றியமைக்கப்பட்டு, மீண்டும் தொகுக்கப்பட்டு, மீண்டும் வெளியிடப்படுவதைப் பார்ப்பது நெஞ்சை உலுக்குகிறது. அதை இன்னும் மோசமாக்குவது என்னவென்றால், அது முழுமையான எளிமை மற்றும் சாதாரணமாகச் செய்யப்பட்டுள்ளது” என ஆனந்த் ராய் தெரிவித்துள்ளார்