தமிழ் சினிமாவின்.. இல்லை இல்லை.. உலக சினிமாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் நடிகனின் பெயர் தனுஷ்... அதை நினைத்து தமிழ் திரையுலகமே பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு 39வது இன்று பிறந்தநாள்...!


தனது தந்தை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் என்பதால் தான் நடிக்க வந்தால் வாரிசு நடிகர் என்ற அடையாளம் தனக்கு ஏற்படும் என கருதிய தனுஷ் மிகச் சிறந்த சமையல்கலைஞ்சனாக வலம் வர விரும்பினார். ஆனால் காலத்தின் கட்டாயம் அவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். நிச்சயம் அன்றைக்கு இந்த மூஞ்சியெல்லாம் நடிக்கலன்னு இப்ப யாரு அழுதா? என்ற விமர்சன ரீதியில் தனுஷின் சினிமா என்ட்ரீ அமைந்தது.






தொடர்ந்து காதல் கொண்டேன் திருடா திருடி, அப்போது இல்லாமல் இப்போது கொண்டாடப்படும் புதுப்பேட்டை, அது ஒரு கனாக்காலம் என படங்களில் நடித்தாலும் அவருக்கு சரியான திருப்புமுனை என்பது ஏற்படவே இல்லை. இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து திரையுலகினர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்த நேரத்தில்தான்  தலைப்பில் சொன்னது போல தனுஷூக்கு பல்சர் பைக் கை கொடுத்தது மட்டுமல்லாமல் அவரது சினிமா வாழ்க்கையே தடம் மாற்றி விட்டது. 






2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த அழகிய தமிழ் மகன், சூர்யா நடித்த வேல் ஆகிய படங்களுக்கு இடையே வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படம் வெளியானது. இந்தப் படம் தான் இளைஞர்களை கவரும் வகையில் தனுஷூக்கு அமைந்தது. கிட்டத்தட்ட பல்சர் பைக் மீது தமிழக இளைஞர்கள் பித்து பிடித்து அலைந்து கொண்டிருந்த நேரம் இந்த படம் வெளியானதால் எளிதாக தனுஷை ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். 2008 ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த தனுஷ் 2010 ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தான் எப்பேர்பட்ட நடிகன் என்பதை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார். இதன் விளைவு தேசிய விருது இவரை தேடி வந்தது.


ஆரம்பத்தில் தான் நடித்த சில படங்களில் பாடகராகவும் கெத்து காட்டிய தனுஷ் 2012 ஆம் ஆண்டு தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 திரைப்படம் பாடலாசிரியராக அவரை அடுத்த பாதைக்கு இழுத்து செல்ல ஆரம்பித்தது. அந்த படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் உலக அளவில் ஹிட்டாகி, அந்த ஒரே பாடல் மூலம் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்துக்காக அழைக்கப்பட்டார் தனுஷ். இதன் பின்னர் தயாரிப்பில் களம் இறங்கினார். வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்தார்.






2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன வேலையில்லா பட்டதாரி படம் தனுஷின் சினிமா வாழ்க்கையில் மீண்டும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து அவரது கவனம் இந்தி பக்கம் திரும்பியது. அம்பிகாபதியில் தனது இந்தி பயணத்தை தொடங்கிய தனுஷ் ஷமிதாப் படத்தில் அமிதாப்பச்சன் நடித்து அவருக்கு டஃப் கொடுத்தார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் அடுத்தது என்ன இயக்குநர் தான். அதையும் ஒரு கை பார்க்க தயாரானார் தனுஷ். ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி படத்தின் மூலம் அந்த ஆசையை தீர்த்துக் கொண்டார். 






கோலிவுட்,பாலிவுட்,அப்படியே ஸ்ட்ரைட்டா ஹாலிவுட் என தனுஷூக்கு அந்த வாய்ப்பு தேடியே வந்தது. The Extraordinary Journey of the Fakir, The Gray Man போன்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் தன் பெயரை நிலை நாட்டினார். அதே சமயம் அசுரன், வட சென்னை, கர்ணன் என தன் நடிப்பை சொல்லும் படங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். iஇதில் அசுரன் படத்திற்காக மீண்டும் தேசிய விருது அவருக்கு கிடைத்தது.  கொரோனா காலத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமான ஓடிடி தளத்திலும் தனது ஜகமே தந்திரம், மாறன் படங்களை வெளியிட்டு இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என கேட்கும் அளவிற்கு ஒரு பன்முகத்தன்மை கொண்டு கலைஞராக திகழும் தனுஷூக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண