அரசியல் கட்சிகள் தங்களுக்கென வலுவான டிஜிட்டல் அணிகளை உருவாக்கி வரும் நிலையில், அதே பாணியில் தனுஷுக்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வலைதள குழு உருவாக்கப்படுவது அவரது அடுத்தகட்ட நகர்வு குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனவும் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள தனுஷ், சமீபகாலமாக சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற விவாதமும் அவ்வப்போது எழுந்து வருகிறது. எனினும், தனுஷ் இதுவரை அரசியல் கட்சி தொடங்குவது குறித்தோ, தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நற்பணி மன்ற விரிவாக்கம் 

அதேநேரத்தில் அவரது ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகள் அரசியல் விவாதங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. சமீபத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நலச்சங்கங்களை உருவாக்கி, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் ஈடுபடுமாறு தனுஷ் ரசிகர் மன்றம் அழைப்பு விடுத்தது. தொகுதி வாரியாக ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, அவரது ரசிகர் அமைப்பு ஒரு கட்டமைப்புடன் செயல்படுவதற்கான முயற்சியாக கவனம் பெற்றது.

Continues below advertisement

ரசிகர்களுக்கு அறிவுரை 

இதற்கு முன்னதாக ரசிகர்கள் நடத்தி வரும் நலப்பணிகளை பாராட்டிய தனுஷ், ஆடியோ வெளியீடு மற்றும் ரசிகர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு அப்பால் சமூகத்திற்கு தேவையான நலப்பணிகளில் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தங்கள் பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சென்னையில் தான் படித்த பள்ளிக்கு தனுஷ் தனது சொந்த நிதியில் புதிய கல்விக் கட்டிடத்தை அமைத்து வழங்கினார். அந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தபோது மாணவர்களிடம் கல்வி மற்றும் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். தனுஷின் இந்த சமூக அக்கறை சார்ந்த நடவடிக்கைகளும் அவரது ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளும் அரசியல் களத்துடன் ஒப்பிட்டு பேசப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

ரூ.1 கோடி செலவில் ஐடி விங்

இந்த பின்னணியில்தான் தனுஷுக்காக சுமார் ரூ.1 கோடி மதிப்பில் சமூக வலைதள ஐடி விங் உருவாக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இந்த குழு அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் அணிகளைப் போன்ற கட்டமைப்புடன் செயல்படும் வகையில் உருவாக்கப்படுவதாகவும், தனுஷின் சமூக வலைதள இருப்பை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் தனுஷ் தொடர்பான பதிவுகளை அதிகரிப்பது, பல்வேறு தளங்களில் அவரது செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது, ரசிகர்களுடன் டிஜிட்டல் வழியில் தொடர்பை வலுப்படுத்துவது மற்றும் அவரது செயல்பாடுகளை திட்டமிட்டு மக்களிடம் கொண்டு செல்வது போன்ற பணிகளில் இந்த ஐடி விங் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் சூழலில், அரசியல் கட்சிகளின் ஐடி விங்கள் தேர்தல் பிரசாரம் மற்றும் கருத்து உருவாக்கத்தில் முக்கிய கருவியாக மாறியுள்ளன. அந்த சூழலில் தனுஷுக்காக தனி டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்படுவது அவரது அரசியல் வருகையில் அடுத்த நகர்வாக பார்க்கப்படுகிறது