தீபிகா படூகோன்


பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தீபிகா படூகொன். நடிப்பு , அழகு என இரண்டிலும் மற்ற நடிகைகளைக் காட்டிலும் அதிகப்படியான ரசிகர் கூட்டம் இவருக்கு இருக்கிறது. பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று வந்த தீபிகா படூகோன் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டு புகழின் உச்சத்திற்கே சென்றார். பாலிவுட் திரையுலகின் அதிகம் கொண்டாடப் படும் தம்பதியாக தீபிகா மற்றும் ரன்வீர் தம்பதியினர் இருந்து வருகிறார்கள். தற்போது தனது முதல் குழந்தையை வரவேற்க ஆவலாக காத்திருக்கிறார் தீபிகா படூகோன்


தீபிகா மீது நெட்டிசன் விமர்சனம்


எந்த அளவிற்கு புகழப் படுகிறாரோ அதே அளவிற்கு தீபிகா மீது எக்கச்சக்கமான வன்மங்களை இணையச் சமூகம் கொட்டி இருக்கிறது. தீபிகாவின் முன்னாள் காதல் வாழ்க்கை பற்றி அவர் கரண் ஜோகரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.  சமீபத்தில் மக்களவை தேர்தலில் நடிகை தீபிகா படுகோன் தனது வாக்கை பதிவு செய்தபோது அவரது வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது . இந்த வீடியோவில் தீபிகா தான் கர்ப்பமாக இருப்பதையும் போலியாக பாவனைக் காட்டுவதாக அவரை நெட்டிசன்கள் விமர்சித்தார்கள். இதனைத் தொடர்ந்து தீபிகாவுக்கு ஆதரவுக் குரல்கள் பெருகத் தொடங்கின. எவ்வளவு விமர்சனங்கள் வந்தபோதிலும் பாலிவுட்டில் தனக்கான ஒரு இடத்தை எப்போதும் தக்க வைத்திருக்கிறார் தீபிகா. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் தேடப் பட்ட இந்திய நட்சத்திரங்களில் முதலிடத்தை பிடித்துள்ளார் தீபிகா படுகோன்


அதிகம் தேடப் பட்ட இந்திய பிரபலங்கள்






திரைத்துறையை மையப்படுத்திய முன்னணி இணையதளமான ஐ,எம்.டி.பி தங்கள் தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப் பட்ட இந்திய பிரபலங்களின் ப்ரோஃபைல்கள் பற்றி தகவலை வெளியிட்டது. அதன் படி கடந்த 10 ஆண்டுகளில் (2014 முதல் 2024 வரை) ஐ.எம்.டிபி தளத்தில் அதிகம் தேடப் பட்ட இந்திய பிரபலங்களில் தீபிகா படுகோன் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக நடிகர் ஷாருக் கான் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் ஐஸ்வர்யா ராய் , நான்காவது இடத்தில் ஆலியா பட் , ஐந்தாவது இடத்தில் மறைந்த நடிகர் இர்ஃபான் கான்  இடம்பிடித்துள்ளார்கள். 


இது குறித்து பேசிய நடிகை தீபிகா படூகோன்  ‘ எண்ணற்ற மக்களின் ரசனையை பிரதிபலிக்கும் இப்படியான ஒரு வரிசையில் என் பெயர் இடம்பெற்றிருப்பது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.