சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து அமர்களப்படுத்திய நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தானம். தனக்கென ஒரு தனி காமெடி ஸ்டைலை உருவாக்கி கலக்கி ஏராளமான ரசிகர்களைப் பெற்று ,இன்று ஹீரோவாக தனது பயணத்தை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார் சந்தானம். 


அந்த வகையில் அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28ம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. சந்தானம் ஜோடியாக நடிகை சுரபி நடித்திருந்தார். மேலும் பெப்சி விஜயன், மாறன், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், தீபா என ஒட்டுமொத்த காமெடி டீமும் இப்படத்தில் நடித்திருந்தனர். வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. பாக்ஸ் ஆபிசில் சுமார் 20 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


 



நல்ல கம் பேக்:


சமீப காலமாக சந்தானம் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் கவனம் பெறாததால் துவண்டு போன சந்தானத்திற்கு ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஒரு நல்ல கம் பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பி வந்தாலும் சைலெண்டாக ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படமும் ஒரு பக்கம் திரையரங்குகளில் ஓடி இந்த வசூலை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஓடிடியில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’:


‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாத காலம் முடிவு பெறும் நிலையில் அதன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இனி திரை ரசிகர்கள் ஓடிடியிலும் பார்த்து ரசிக்க முடியும். இப்படம் சந்தானத்திற்கு ஒரு பிரேக் கொடுத்துள்ளதால் இனி அவரின் மார்க்கெட்டும் எகிறிவிடும் என்ற பேச்சுக்கள் சினிமா வட்டாரத்துக்குள் அடிபடுகின்றன. 


விரைவில் வெளியாகும் 'கிக்' :


ஃபார்ச்சூன் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன்ராஜ் தயாரிப்பில் கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'கிக்'. தான்யா ஹோப் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், Y.G.மகேந்திரன், ஷகிலா, செந்தில், மனோபாலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தானம் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீசுக்காக பல மாதங்களாக காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.