மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. நடிகர் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார் என ஏராளமானோர் நடித்துள்ள இப்படத்திற்கு முதல்முறையாக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். 


கூல் சுரேஷ் விமர்சனம் :


ஒவ்வொரு படமும் வெளியானவுடன் படத்திற்கு ஏற்ற ஒரு காஸ்ட்டியூம் போட்டு படம் பார்த்து விட்டு ஊடகங்களுக்கு கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டவர் கூல் சுரேஷ். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள 'கஸ்டடி' படத்திற்கு ஏற்றபடி கைகளில் விலங்குடன் போலீஸ் யூனிபார்மில் வந்த கூல் சுரேஷின் விமர்சனத்திற்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர் ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள். 


 



தெலுங்கு பக்கம் போய்ட்டிங்களே :


கஸ்டடி படம் குறித்து கூல் சுரேஷ் பேசுகையில் "கஸ்டடி வெங்கட் பிரபுவோட பெஸ்ட் அடி. என்னுடைய தலைவன் சிம்புவை வைத்து சூப்பர் ஹிட் படம் கொடுத்த நீங்க திரும்பவும் அவரை வைத்து தமிழ்நாட்டில் கொடி கட்டுவீங்க என பார்த்தா, எனக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாம இந்தியா முழுவதும் என்னோட கொடி பறக்கும் என தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்து இருக்கீங்க. வெங்கட் பிரபு சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 


90'ஸ் பெருசுங்க :
 
படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்கு. நடிகர் ஜீவா அண்ணனாக நடித்துள்ளார். ராணுவ அதிகாரியாக நடிகர் ராம்கி நடித்துள்ளார். அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்த மாதிரி நாக சைதன்யா சூப்பரா நடித்துள்ளார். வயதான கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.


நீ வயசானவன் என நினைச்சேன் ஆனா நீ இன்னும் சிறுசாவே தான்பா இருக்குற . அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் கிளாப்ஸ் பறக்குது. படத்தோட டயலாக் எல்லாம் அருமையா இருக்கு. டயலாக் ரைட்டருக்கு எனது வாழ்த்துகள். சரத்குமார் சாரை சூர்யன் படத்தில் பார்த்தது போலவே இருந்தது. 90களில் நடித்த பெருசுகள் எல்லாரையும் சிறுசுங்க மாதிரி முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைச்சு இருக்கீங்க. பிரேம்ஜி கூட நடித்து இருக்கிறார். எல்லோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" எனப் பேசினார்.


கீர்த்தி ஷெட்டி பற்றி மோசமான பேச்சு :


தொடர்ந்து க்ரித்தி ஷெட்டி பற்றிப் பேசிய கூல் சுரேஷ், “படத்தின் ஹீரோயின் க்ரித்தி ஷெட்டி உதடு அடடா! நான் எப்பவுமே அவங்களோட கண்களையும் உதட்டையும் தான் பார்ப்பேன். நாகப்பழம் போல இருக்குற கண்ண பார்ப்பேன், கோவைப்பழம் மாதிரி இருக்குற உதட்டை பார்ப்பேன்.


பெண்களோட கண்கள் அழகாக இருக்கும் அதுல உண்மை தெரியும். அவங்க உதட்டை பார்த்தா அவங்க வார்த்தைகள் உண்மையா இருக்கா என்பதை தெரிந்து கொள்ள அங்க மட்டும் தான் பார்ப்பேன். மத்தவங்க எல்லாரும் எங்க பார்ப்பாங்கனு எனக்கு தெரியாது. க்ரித்தி ஷெட்டி உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பேசினார்.


இந்நிலையில் படத்தைப் பற்றி விமர்சனம் சொல்லச் சொன்னால் ஹீரோயின் பற்றி இப்படி பொதுவெளியில் கூல் சுரேஷ் பேசியது கண்டனங்களைப் பெற்று வருகிறது.