Manimegalai: பிரபல தனியார் தொலைக்காட்சி நெறியாளரான பிரியங்கா மீது, சக ஊழியரான மணிமேகலை சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 


குக் வித் கோமாளியில் மணிமேகலை விலகல்:


தமிழ் தனியார் தொலைக்காசியில் ஒளிபரப்பாகி வரும், குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நகைச்சுவை நிகழ்ச்சி கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான், கடந்த 6 ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த மணிமேகலை, இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சில் தான் தொடரப்போவதில்லை என அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சக பெண் நெறியாளர் மீது மணிமேகலை சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.


சுயமரியாதை முக்கியம் - மணிமேகலை:


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது தொடர்பாக மணிமேகலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த சீசன் முழுவதும் இன்னொரு பெண் தொகுப்பாளர் அதிகமாக ஆதிக்கம் செலுத்தினார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டியவர், ஆனால் அவர் அதை மறந்துவிட்டு, என்னை வேலை செய்ய விடாமல் தொகுப்பாளர் பகுதிகளில் வேண்டுமென்றே அடிக்கடி குறுக்கிட்டார். இந்த சீசனில் என் உரிமைகளைக் கேட்பதும், கவலையை தெரிவிப்பதும் கூட ஒரு குற்றமாகிவிடுகிறது. ஆனால் எனக்கு சரியானது எதுவோ அதற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன், யாரைப் பற்றியும் நான் கவலைப்படமாட்டேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், பரவாயில்லை. சுயமரியாதை விஷயத்தில் எல்லாமே இரண்டாம் பட்சம்தான். எனவே நான் ‘குக் வித் கோமாளி'யில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.






”பிரியங்காவிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கட்டும்”


பிரச்னைக்கு காரணமான அந்த பெண் நெறியாளரின் பெயரை மணிமேகலை குறிப்பிடாவிட்டாலும், குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் பங்கேற்றுள்ள பிரியங்கா தான் அது என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இதனிடையே, மணிமேகலை வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அந்த பெண் நெறியாளர் தான் ஒரு பெர்ய ஆள் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போன்று என்னால் நடந்துகொள்ள முடியாது. அவருக்கு இன்னும் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் கிடைக்கட்டும். அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைப்பதன் மூலமாவது அடுத்தவருக்கான வாய்ப்புகள் பறிபோகாமல் இருக்கட்டும்” என மணிமேகலை தெரிவித்துள்ளார். மணிமேகலையின் சமூக வலைதள பதிவு மற்றும் வீடியோவை பகிர்ந்து, நெட்டிசன்கள் பலரும் பிரியங்காவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் தேவையில்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மணிமேகலையின் வேலையில் தலையிடுவதாக பல வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.