தமிழ் சினிமா எத்தனை எத்தனையோ நகைச்சுவை நடிகர்களைக் கடந்து வந்துள்ளது. குழுவாக சேர்ந்து காமெடியில் கலக்குபவர்கள் பலர். அதில் ஒருவர் தான் அனைவருக்கும் பரிச்சமயமானவரான நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன். வைகைப் புயல் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடிகர் பாவா லட்சுமணன் காமெடி அல்டிமேட். அதிலும் குறிப்பாக 'மாயி' படத்தில் இடம்பெற்ற 'வா மா மின்னல்' காமெடி காட்சி மூலம் மிகவும் பிரபலமானார். 


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பாவா லட்சுமணன் தீவிர சிகிச்சைக்குக் பிறகு உயிர் பிழைத்து தற்போது நலமுடன் இருக்கிறார். சமீபத்தில் இவர் தனியார் ஊடகத்துக்க்கு அளித்த பேட்டி மூலம் சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளார். திருமண செய்து கொள்ளாதது, தனியாக சிறிய ரூம் ஒன்றில் வசிப்பது, உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது அவருக்கு உதவி செய்தவர்கள் என பல விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசி இருந்தார். 


 



தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பாளரான ஆர்பி சௌத்ரியிடம் மேனேஜராக சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் பல ஆண்டுகளாக விஸ்வாசமாக முழு ஒத்துழைப்பை போட்டு உழைத்துள்ளார் பாவா லட்சுமணன். அந்த விஸ்வாசத்தின் அடிப்படையில் தான் பாவா லட்சுமணன் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி தான் பெரும் தொகையை மருத்துவ செலவுக்காக அனுப்பியுள்ளார். 


இன்றும் ஆர்பி சௌத்ரியின் மகனும் பிரபலமான நடிகருமான ஜீவா மாதாமாதம் பாவா லட்சுமணனுக்கு 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்காமலேயே அவரின் பேங்க் அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்து வருகிறாராம். “அதற்கு காரணம் நான் ஆர்பி சௌத்ரி சாரிடம் மேனேஜராக விஸ்வாசமாக வேலை செய்யும் போது ஜீவா எல்.கே.ஜி ஸ்கூல் ஸ்டூடென்ட்டா படிச்சுட்டு இருந்தார். நம்ம நிறுவனத்துக்காக இவ்வளவு உழைச்சு இருக்காரே என அவர்களாகவே செய்யும் உதவி தான் இது” எனத் தெரிவித்துள்ளார் காமெடி நடிகர் பாவா லட்சுமணன். 


அதே போல நான் மருத்துவமனையில் இருந்தபோது லொள்ளு சபா பழனியப்பன், ஆரோக்கிய தாஸ், தெனாலி, ராஜாதி ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் வந்து எனக்கு பண உதவி செய்தார்கள். இயக்குநர் விக்ரமன் சார்,  கேபிஒய் பாலா, கேமராமேன் ரவிவர்மன் இப்படி பலரும் வந்து எனக்கு உதவி செய்துள்ளனர் என மனம் நெகிழ்ந்து பேசி உள்ளார் பாவா லட்சுமணன்.