சன் டிவியில் மிகவும் பிரபலமான ஒரு தொடராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஒரு சீரியலாக முதலிடத்தை தக்க வைத்து வருகிறது எதிர் நீச்சல் தொடர். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் வர முக்கிய காரணமாக கருதப்படுபவர் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மாரிமுத்துவின் யதார்த்தமான நடிப்பு.


எதிர்நீச்சல் ஆதி குணசேகரன்:


இயக்குநராக இருந்து பின்னர் நடிகராக பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் புகழின் உச்சிக்கு மாரிமுத்து செல்ல முக்கியமான ஒன்றாக அமைந்தது எதிர் நீச்சல் சீரியல். கடந்த ஆறு மாத காலமாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் பர்சனாலிடியாக இருந்து வந்தார் மாரிமுத்து. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.   


 



நடிகர் மாரிமுத்து இன்று காலை எதிர் நீச்சல் சீரியலின் டப்பிங் பணியில் ஈடுபட்டு இருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரின் இறப்பு திரையுலகத்தினர், சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாக உள்ளது. அவரின் மறைவு செய்தி அறிந்த திரையுலகத்தினர் பலரும் ஆழந்த இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள். 


சக நடிகர்கள் உருக்கம்:


அந்த வகையில் எதிர் நீச்சல் தொடரில் மூத்த அண்ணனாக நடிக்கும் நடிகர் மாரிமுத்துவின் இறப்பை தாங்க முடியாத சக நடிகர்கள் நேரில் சென்று கதறி அழுது அஞ்சலி செலுத்தினர். அவர்களின் சோசியல் மீடியா மூலம் கனத்த இதயத்துடன் நடிகர் மாரிமுத்துவின் பிரிவுக்கு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் குணசேகரன் மனைவியாக நடிக்கும் நடிகை கனிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாரிமுத்துவுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து


"ஏன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு பிரிந்தீர்கள்? ஏன் சார் இவ்வளவு அவசரப்பட்டு எங்க எல்லாரையும் விட்டு போயிடீங்க??
உங்க சிரிப்பு, உங்க அறிவு, உங்க பேச்சு எல்லாம் கண்ணு முன்னாடியே நிக்குது.


நாங்கள் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம் சார்.


உங்கள் குடும்பத்திற்கு வலிமை தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். நீங்கள் ஒரு வெற்றிடத்தை விட்டுவிட்டீர்கள்.


சீக்கிரம் சென்றுவிட்டார். ஈஸ்வரி உன்னை மிஸ் பண்ணுவாள்." என கனத்த இதயத்துடன் பதிவிட்டுள்ளார் நடிகை கனிகா. 


 







அதே போல எதிர் நீச்சல் தொடரின் குணசேகரன் தம்பி கதாபாத்திரமான கதிரின் மனைவியாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஹரிப்ரியா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று நடிகர் மாரிமுத்துவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து "என்னால் இதை நம்பமுடியவில்லை. என்ன சார் அவசரம்.. எங்களை இப்படியே விட்டுவிட்டீர்களே... நந்தினி மிஸ் யூ லைக் ஹெல் மாமா...
உண்மையான கலைஞனுக்கு முடிவே இல்லை... எங்கள் இதயங்களில் நீங்கள் என்றுமே இருப்பீர்கள்...


உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்" என உருக்கமான பதிவை பகிர்ந்து இருந்தார்.  


 






நடிகர் மாரிமுத்துவின் இழப்பை  தாங்க முடியாத ரசிகர்கள் ஏராளமானோர் கமெண்ட் மூலம் அவர்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.