தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் குறித்து நடிகர் கார்த்தி பாராட்டியதற்கு ஊக்கமளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில், கார்த்திக்கு பதிலளித்துள்ளார்.


தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில்  உழவு,  உழவர்கள் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நீர் நிலைகள் சீரமைப்பு மரபு விதைகள் பரவலாக்கம் உள்ளிட்ட அவசியமான திட்டங்களை அறிவித்துள்ள அரசின் செயல்கள் மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு, கம்பு வழங்குதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம், சர்க்கை ஆலைக் கழிவு மண்ணில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல், பத்து லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.


உழவன் ஃபவுண்டேசன் சார்பில் நடிகர் கார்த்தி தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகளைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். 


பாராட்டு


 வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இருவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.


”நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலை பற்றியும் அறிந்துகொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது.


இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.


வேளாண் கருவிகள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் தேவை


அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவற்றை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.


இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதில்


நடிகர் கார்த்தி டிவிட்டரில் பாரட்டியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலத்துள்ளார். அதில்,” அன்பின் , கார்த்தி. உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம். உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்'!” என்று குறிப்பிட்டுள்ளார்.