Director Cheran: யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு இயக்குநர் சேரனின் பதில் அனைவரது மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. 


தமிழ் சினிமாவில் மனித ஆன்மாக்களுக்குள் இருக்கும் காதல், அன்பு, கோபம், பாசம், பரிவு, ஏக்கம், சோகம், இயலாமை என வெளியில் சொல்ல முடியாத அல்லது சொல்லத் தவிக்கிற கதைகளை மைய்யமாக வைத்து பல வெற்றிப்படங்களையும் வெள்ளி விழாக்களையும் கண்ட இயக்குநர் என்றால் அது சேரன்தான். தனக்கென தனி பாணி, ஸ்டார்களை நம்பாமல் கதையையும் சினிமா ரசிகர்களையும் நம்பும் இயக்குநர்களில் இவரும் ஒருவர். 


தமிழ் சினிமாவில் தற்போது புகைச்சலாக உள்ள விஷயம் யார் சூப்பர் ஸ்டார் என்பதாக உள்ளது. என்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என அவரது ரசிகர்களும், விஜய்தான் இப்போதைய சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்களும் சமூக வலைதளத்தில் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்கிறார்கள். 


இதுகுறித்த கேள்விகள் சினிமா வட்டாரத்தை நோக்கி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொருவரும் தங்களது பதில்களைச் சொல்லி வருகிறார்கள். ஒருசிலர் கேள்விகளைத் தவிர்த்து விடுகிறார்கள். இந்நிலையில், இயக்குநர் சேரனிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது,”நான் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இயக்கியது கிடையாது. அவர்கள் இருவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்களின் படம் பார்க்கும் ரசிகன் நான். எனக்கு எனது பிழைப்பு முக்கியம். யாரு சூப்பர் ஸ்டார்? என்பது எனக்கு முக்கியமில்லை. இதை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக்குகிறீர்கள்?”என பதில் அளித்தார். 


யாரு சூப்பர் ஸ்டார் என்பதைப் பேசினால் சோறு வந்துவிடுமா?


அதன் பின்னர் செய்தியாளர்கள் தரப்பில், இருவரது ரசிகர்களும் ட்விட்டரில் சண்டையிட்டுக்கொள்கிறார்களே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அப்படியா! அவர்களுக்கு எல்லாம் சோறு இல்லை பாருங்கள். இதைப் பேசினால் சோறு வந்துவிடும்” என காட்டமாக பதில் அளித்தார். இவரது இந்த பதிலுக்கு பலர், மிகவும் பொறுப்பான பதில் என ஆதரவையும், சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.