நடிகர் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


அதன்படி முன்னதாக லைகா நிறுவனம் விஷால் மீது வழக்கு ஒன்றை தொடந்திருந்தது. அதில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை விஷால் செயல்படுத்த தவறியதால் அவரை செப்டம்பர் 12 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’ . இந்த படத்தில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, சுனில் வர்மா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள மார்க் ஆண்டனி படம்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், திடீரென படத்துக்கு உயர்நீதிமன்றம்  தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வழக்கின் பின்னணி என்ன?


நடிகர் விஷால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் அவர் பட  தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் பெற்றிருந்தார். பின்னர், இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அதற்கு கைம்மாறாக விஷாலும், லைகா நிறுவனமும்  ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர். அதன்படி கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை  விஷால் பட நிறுவனத்தில் வெளியாகும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டது. 
 
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை தராமல் விஷால் நடித்து கடந்த ஆண்டு வெளியான "வீரமே வாகை சூடும்" என்ற படத்தை ரிலீஸ் செய்யவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கேட்டும் லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி  ரூ.15 கோடியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்ய, இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர். 


அதேசமயம் சம்பந்தப்பட்ட ரூ.15 கோடி தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த தடை உத்தரவை விஷால் மீறியுள்ளதாக கூறி அவருக்கு எதிராக லைகா நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டப் பின் நீதிமன்றம் இத்தகைய தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.