கோலிவுட்டில் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பிவரும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் குட்டி கதை சொல்லி விளக்கியுள்ளார்.


சந்திரமுகி திரைப்படம் வரும் செப்.15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று (செப்.03) சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை, எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது:


சந்திரமுகி படம் இத்தனை நாள்கள் ஓடியதற்கு முதல் காரணம் ரஜினிகாந்த், அடுத்த காரணம் பி.வாசு, அடுத்து சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ்.  இவங்கலாம் இல்லனா சந்திரமுகி இல்ல. குரு சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு நன்றி.


கூல் சுரேஷ் என் மேல் நிறைய அன்பு வைத்திருப்பவர். அதன் காரணமாக என்னை சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் என பல முறை சொல்லிவிட்டார். இந்தப் பிரச்னை நிறைய இடங்களில் ஓடிட்டு இருக்கு. இங்க என்ன ஒப்பிட்டு பேசுனதால நான் பதில் சொல்ல வேண்டிய சூழல்ல இப்போ இருக்கேன்.


சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு விஜய் சார் எங்கயாவது கேட்டாரா? கேக்கல, நான் எப்ப போய் விஜய் சார பாத்தாலும் “தலைவர் எப்படி இருக்காரு, அவர் உடம்பு எப்படி இருக்கு?”னு தான் கேப்பார். அதனால் அவருக்கு இவர் மேல் மரியாதை இருக்கு.


அதேபோல் பீஸ்ட் படம் பத்தி சூப்பர்ஸ்டார் கலெக்‌ஷன் பரவாயில்லைனு சொன்னாலும், “இல்ல பா... படம் சூப்பரா இருக்காம். கலெக்‌ஷன் செம்மயா போதாம், சன் டிவில சொன்னாங்க”னு தான் சொல்வாரு. இவங்க ரெண்டு பேருக்குள்ளயும் எந்த பிரச்னையுமில்ல. இதுக்கு ஒரு குட்டி கதை சொல்லலாம்னு இருக்கேன்.


ஒரு மாங்கா மரம், ஒரு தேங்கா மரம்.. தேங்கா மரத்துல மாங்கா முளைக்கும்னு நினைச்சா முளைக்குமா? முடியாது. அதேபோல் மாங்கா மரத்துல தேங்கா முளைக்கும்னு நினைச்சாலும் முடியாது. மாங்கா மரத்துல மாங்கா முளைக்கும், தேங்கா மரத்துல தேங்கா தான் முளைக்கும். ரெண்டின் விதியும் வேற. ஆனால், ரெண்டும் ஒரே மண்ணுல தான் வளருது, எப்படி நாம அதை பிரிக்க முடியும்?


ஆனால், நடுவுல ஒருத்தரு வந்து சொல்லிட்டு போய்ட்டாரு.. ஏ மாங்கா மரத்துல தேங்கா முளைக்குதுபானு... எங்க போனாலும் இப்படி சொன்னா நாம என்ன சொல்ல முடியும்? அடுத்த சூப்பர் ஸ்டார் இவரு தான், இவரு தான்னு சொன்னா நாம என்ன பண்ண முடியும்? அதனால நடுவுல வியாபாரம் பண்றவங்க தயவு செஞ்சு விட்டுடுங்க ப்ளீஸ். ஏன்னா இங்க எல்லாரும் குடும்பமா இருக்கோம். அதனால இனிமே அடுத்த சூப்பர் ஸ்டார்னு யாராவது வந்து கேட்டா, தேங்கா மரத்துல தேங்கா தான் முளைக்கும், மாங்கா மரத்துல மாங்கா தான் முளைக்கும்னு சொல்லிட்டு போய்ட்டே இருங்க” எனப் பேசியுள்ளார்.