நடிகை மீரா மிதுன் காணாமல் போன விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை மீராமிதுன். அதற்கு முன்னால் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்த  பிக்பாஸில் கலந்துக்கொண்டு பல சர்ச்சையான சம்பவங்களில் சிக்கினார். அதுமட்டுமல்லாமல் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர், நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களை வம்பிழுத்து அவர்களது ரசிகர்களிடம் கடும் எதிர்ப்புகளை பெற்றார். 






தொடர்ந்து பட்டியலின மக்கள் குறித்து மீரா மிதுனும், அவரது நண்பர் சாமும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டனர். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை தொடங்க இருந்த நிலையில் மீராமிதுன் தலைமறைவானார்.


அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாகவும், அவர் பயன்படுத்திய ஒரு மொபைலும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் தனது மகளை காணவில்லை என மீராமிதுனின் தாயார் ஷியாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். 






இந்நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து 2 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாளை இந்நோட்டீஸ் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.