நடிகர் சங்க தேர்தலில்  கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது. பாண்டவர் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர். 


பாண்டவர் அணி வெற்றி


இந்தத் தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், முதற்கட்டமாக நடிகர் விஷாலும் நடிகர் கார்த்தியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாசர் ( 1,701 வாக்குகள்) பாக்கியராஜ் ( 1,054 வாக்குகள்)


துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சு முருகன் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் பாண்டவர் அணி நடிகர் சங்கத்தேர்தலின் 5 பதவிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் சங்கரதாஸ் அணி சார்பில் போட்டியிட்ட ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி, உதயா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். 


 




முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்கு உறுப்பினர்கள் முறையாக அழைக்கப்படவில்லை மற்றும் தேர்தலை அனைத்து இடங்களிலும் நடத்தாமல் சென்னையில் மட்டும் நடத்தியதாக கூறி இதை ரத்து செய்ய வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.


இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். இந்த வழக்கில் 2020ஆம் அவர் தீர்ப்பளித்தார். அதில், 2019ஆம் ஆண்டு நடைபெற்று தேர்தலை ரத்து செய்து அவர் உத்தரவிட்டார். மேலும் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்து,  மூன்று மாதத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். 


இந்தத் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல் முறையீட்டு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, “கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளன.


வாக்கு பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளது. மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என நடிகர் சங்கம் தரப்பில் வாதிட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் அவர்களுடைய தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 


இந்த நிலையில், இந்த தேர்தலின் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், இடையில் பதிவானதை விட 5 வாக்குகள் கூடுதலாக இருந்ததாக கூறி ஐசரி கணேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தப்பட்டது. அதனைத்தொடந்து வாக்கு எண்ணிக்கை பணி தொடர்ந்த நிலையில் முதற்கட்டமாக நடிகர்கள் விஷாலும், கார்த்தியும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நாசர், கருணாஸ், பூச்சி முருகன் வெற்றி பெற்ற நிலையில் பாண்டவர் அணி அரியணையை கைப்பற்றிருக்கிறது.