தெலுங்கு படவுலகின் சூப்பர் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் நடிகர் ராம்சரண். இவர், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் இணைந்து தன்னுடைய 15ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் வினயவிதேயராமா படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமன் பிறந்த நாளில் வெளியானது






ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


இந்நிலையில் வழக்கம்போல் இப்படத்திலும் பிரம்மாண்டத்துக்கு ஷங்கர் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. படக்காட்சிகளில் பிரம்மாண்டம் இருக்கிறதோ இல்லை நிச்சயம் பாடல்களில் பிரம்மாண்டத்தை வைத்து விடுவது ஷங்கரின் வழக்கம்.ஷங்கரின் ஒரு பாடலுக்கான செலவில் ஒரு சிறிய படத்தையே எடுத்துவிடலாம் எனச் சொல்லப்படும் அளவுக்கு பிரம்மாண்டத்தை வைத்து  கவனிக்க வைப்பார் ஷங்கர். 


அதன்படி தற்போது ஷூட்டிங் நடக்கும் RC15 படத்தின் ஒரு பாடலுக்கு 1000 நடனக் கலைஞர்கள் நடனமாடியுள்ளனராம்.ராம்சரண் மற்றும் நடிகை கியாராவுடன் இணைந்து இந்த 1000 நடன கலைஞர்களும் நடனம் ஆடி இருப்பதாகவும், இந்த நடனத்தை நடன இயக்குநர் கணேஷ் ஆச்சாரியா இயக்கியுள்ளார். இந்திய சினிமாவில் நிச்சயம் இந்த டான்ஸ் ஒரு மைல்கல்லாக இருக்குமென கூறப்படுகிறது. தீவிரமான ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் வரும் டிசம்பருக்குள் 70% படம் முடிவடைந்துவிடும் எனத் தெரிகிறது.