பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக வந்தவர் த்ரிஷா. அதன் பின்னர் லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 ஆகிய படங்களில் நடித்த த்ரிஷாவுக்கு சூர்யாவுடன் இணைந்த மெளனம் பேசியதே படம் மிகப் பெரிய ஹிட்டை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து விக்ரமின்  சாமி, மணி ரத்னத்தின் ஆய்த எழுத்து, விஜயின் கில்லி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் அவர் இணைந்தார்.


 






தொடர்ந்து பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா சிம்புவுடன் முதன்முறையாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தார். இந்தப்படம் அவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் பூலோகம், கமலுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம், அஜித்துடன் என்னை அறிந்தால், விஜய் சேதுபதியுடன் 96 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.


தற்போது மணிரத்னத்தின் பொன்னின் செல்வன் படத்தில் நடித்து வரும் த்ரிஷா, முதன் முறையாக தெலுங்கில் தயாராகி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும்  ‘பிருந்தா’ என்ற வெப் தொடரில் நடிக்கிறார்.


சூர்யா வங்கலா இயக்கும் இந்தப்படத்தில், துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது த்ரிஷா படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.






அந்தப் புகைப்படத்தில் போலீஸ் அதிகாரி உடையில் இருக்கும் த்ரிஷா, அங்குள்ள நாய்களுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் த்ரிஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.