மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினமான இன்று சர்ச்சைக்குரிய போனி கபூர் - ஸ்ரீதேவியின் காதல் கதை குறித்த பிளாஷ்பேக் ஸ்டோரி ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. 


 



தென்னிந்திய சினிமாவில் 80களில் கொடி கட்டி  பறந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகிழ்ச்சியான 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்தும் அவர் எப்படி ஸ்ரீதேவியின் மீது காதலில் விழுந்தார் என்பது குறித்தும் நிகழ்ச்சி ஒன்றில்  மிகவும் வெளிப்படையாக போனி கபூர் பேசிய வீடியோ ஒன்று ஸ்ரீதேவியின் நினைவு தினமான இன்று சோசியல்  மீடியாவில் வைரலாகி வருகிறது. 







1970களில் ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்களை பார்த்து அவர் மீது காதலில் விழுந்துள்ளார் போனி கபூர். ரிஷி கபூரை வைத்து படம் ஒன்று தயாரிக்க முடிவு செய்து அதற்கான உரிமையையும் கைப்பற்றியுள்ளார். ஹீரோயினை ஏற்கனவே முடிவு செய்து விட்டு தான் இந்த திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை துவங்கியுள்ளார் போனி கபூர். அந்த ஹீரோயின் தான் ஸ்ரீதேவி. முதன்முதலாக ஸ்ரீதேவியை நேரில் சென்று சந்திப்பதற்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். ஆனால் ஸ்ரீதேவி படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக கூறப்பட்டதால் மிகுந்த மனவேதனையுடன் மும்பைக்கு திரும்பியுள்ளார் போனி கபூர். 


1979ம் ஆண்டு ஸ்ரீதேவி கிளாமர் ரோலில் நடித்த 'சோல்வா சவான்' திரைப்படத்தை பார்த்து மயங்கிய போனி கபூர் மீண்டும் மிஸ் இந்தியா  திரைப்படத்தில் ஹீரோயினாக புக் செய்வதற்காக சென்றுள்ளார். ஆனால் அவரை பார்த்ததும் கூச்சமடைந்த ஸ்ரீதேவி அவரது அம்மாவை விட்டு போனி கபூரிடம் பேச வைத்தார். அப்படத்தில் நடிக்க அவரது அம்மா 10 லட்சம் சம்பளம் கேட்டார். ஆனால் போனி கபூரோ 11 லட்சம் தருவதாக கூறவே உடனே போனி கபூர் வசம் வந்தார் ஸ்ரீதேவியின் அம்மா. 






 


மிஸ்டர் இந்தியா படப்பிடிப்பின் போது ஸ்ரீதேவியை மிகவும் அக்கறையுடனும் பாசத்துடனும் பார்த்துக்கொண்டார் போனி கபூர். அவருக்கென தனி மேக்கப் ரூமை ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தார். அவர் விருப்பட்ட உடைகளை அணிய அனுமதி கொடுத்தார். அவருக்கென மூன்று மேக் அப் ஆர்டிஸ்ட்கள், காஸ்டியூம் டிசைனர்கள் இருந்தார்கள். சாந்தினி ஷூட்டிங் சமயத்தில் ஸ்விட்சர்லாந்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. அவரை பார்ப்பதற்காக அங்கு சென்றார் போனி கபூர். அந்த சமயத்தில் ஸ்ரீதேவி இல்லாமல் வாழவே முடியாது என்ற உணர்வு ஏற்பட்டது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நான் ஸ்ரீதேவியுடன் இருக்கவே விரும்பினேன். அதனால் போனி கபூர் மும்பை திரும்பியதும் அவரது மனைவி மோனா கபூரிடம், ஸ்ரீதேவி மீதான காதல் குறித்து பேசினார். அதனால் போனி கபூர் - மோனா இடையே திருமண முறிவு ஏற்பட்டது. அதற்கு காரணம் ஸ்ரீதேவி என பரவலாக பேசப்பட்டது. 


ஸ்ரீதேவியும் மெல்ல மெல்ல போனி கபூர் மீது இருந்த காதலை  உணர்ந்தார். ஸ்ரீதேவியின் தாயாரின் உடல் நலம் சரியில்லாத சமயத்தில் அதிக நெருக்கம் ஏற்பட்டது. தாயின் இறப்பு பின்னர் தனிமையில் இருந்த ஸ்ரீதேவிக்கு போனி கபூரின் அன்பு மிகவும் ஆறுதலை இருந்தது. அதற்கு பிறகு அவர்கள் இருவரின் இடையில் காதல் பின்னி பிணைந்தது.  இருப்பினும் போனி கபூரின் காதலை ஏற்று கொள்ள நீண்ட காலம் எடுத்துக்கொண்டார் ஸ்ரீதேவி. பின்னர் இருவரும் 1996 திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் 20 ஆண்டுகால திருமணம் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமைந்தது.