காதல், திருமண கிசுகிசுக்கள் தாண்டி பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா - ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சட்டா இருவருகும் வரும் மே 13ஆம் தேதி நிச்சயம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


பரினீதி - ராகவ் சட்டா காதல்


பாலிவுட்டின் பிரபல நடிகையும் ப்ரியங்கா சோப்ராவின் அத்தை பெண்ணுமான பரினீதி சோப்ராவும், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சட்டாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இருவரும் தொடர்ந்து பல பொது இடங்களில் ஒன்றாக வலம் வரத் தொடங்கிய நிலையில், இவர்கள் இருவருமே தங்களைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு மௌனம் சாதித்து வந்தனர்.


மேலும் இவர்கள் இருவரும் லண்டன் எகானமிஸ் ஸ்கூலில் ஒன்றாகப் படித்ததாகவும், நீண்ட கால நண்பர்களான இருவரும் சமீபகாலமாக டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.


இச்சூழலில் இவர்கள் இருவருக்கும் வரும் மே 13ஆம் தேதி டெல்லியில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


விரைவில் திருமணம்


மேலும், சுமார் 150 நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விழாவில் அரசியல் மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


பரினீதியும் ராகவ் சட்டாவும் இதுவரை தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், முன்னதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சீவ் அரோரா தன் ட்விட்டர் பக்கத்தில் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்து இவர்களது உறவை உறுதிப்படுத்தி இருந்தார்.


 






ஐபிஎல் பார்க்க வந்த ஜோடி


டெல்லி மற்றும் பஞ்சாப் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற ராகவ் சட்டா, இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். மேலும் இருவரும் பஞ்சாப், மொஹாலி மைதானத்தில் ஒன்றாக ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்தது பலரது புருவங்களை உயர்த்தியது.


நடிப்பு தாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைக்காட்டி வரும் பரினீதி, அடுத்ததாக சம்கிலா எனும் படத்தில் தோன்றவுள்ளார். இந்நிலையில் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை இருவரும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தனது இரண்டாவது படமான இஷக்‌ஸாதே திரைப்படத்திற்காக 2012ஆம் ஆண்டு தேசிய விருது,(சிறப்பு விருது) பெற்ற பரினீதி, ஃபில்ம்ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்து பாலிவுட் தாண்டியும் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார்.