2015ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 9 வது சீசனில் ஒரு போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் நோரா ஃபதேஹி. அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பிறகு நடன நிகழ்ச்சியான ஜலக் திக்லா ஜாவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனது சிறப்பான நடனத்தால் அனைவரையும் கவர்ந்தார். 


 



பாகுபலி பிரபலம் :


தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த நோரா ஃபதேஹிக்கு பாலிவுட் திரையுலகில் பட வாய்ப்புகள் குவிந்தது. அப்படி அமைந்த ஒரு வாய்ப்பு தான் ரோர் : டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் படத்தின் மூலம் அறிமுகம். அதனை தொடர்ந்து டெம்பர், கிக் 2 போன்ற படங்களில் ஐட்டம் நம்பர்களில் கலக்கலாக நடனமாடினார். இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த நோரா ஃபதேஹி பான் இந்திய திரைப்படமாக வெளியாகி பாராட்டுகளை குவித்து வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த பாகுபலி திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமான முகமானார். 


கைகலப்பில் முடிந்த தவறான அணுகுமுறை :


தற்போது பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நோரா ஃபதேஹி சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஒருவர் அத்துமீறி தவறாக நடந்து கொண்டது குறித்து பேசியிருந்தார். நோரா ஃபதேஹி சினிமாவில் அறிமுகமான ரோர் - தி டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் திரைப்படத்தில் உடன் நடித்த சக நடிகர் ஒருவர் தவறான எண்ணத்தில் தொட முயற்சித்ததால் அவரை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார் நோரா ஃபதேஹி. ஆத்திரமடைந்த நடிகர் தான் செய்த தவறையும் உணராமல் திருப்பி நோராவை  அறைந்துள்ளார். மீண்டும் நோரா அந்த நடிகரை அறைய இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. கடும்  சொற்களால் அசிங்கமாக நோராவை திட்டியுள்ளார் அந்த நடிகர் என்பதை மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருந்தார் நோரா ஃபதேஹி. நேர்காணலில் அவர் கூறிய இந்த தகவல் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.