நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் தொடர்பான வசூல் குறித்து வெளியான தகவலுக்கு பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். 


‘பிரின்ஸ்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்னும் படத்தை தயாரித்துள்ளது. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.  மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், சுனில் குமார், பாலாஜி சக்திவேல், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்த மாவீரன் படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.


 தியேட்டர் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், மாவீரன் படம் வசூலில் தொடர்ச்சியாக நல்ல நிலையை அடைந்து வருகிறது. அதேசமயம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.மாவீரன் படத்தின் டீசர் ,ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து தியேட்டர்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 


தமிழ், தெலுங்கில் வெளியான மாவீரன் படத்தின் கிளைமேக்ஸை சிலர் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி யோகிபாபு காமெடியுடன் சிறப்பாக கையாளப்பட்ட நிலையில், இரண்டாம் பாதி சிவகாத்திகேயனின் ஹீரோ பில்ட் அப்பிறாக அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. முன்னதாக பிரின்ஸ் படத்தின் தோல்வியால் மாவீரன் படத்தின் கதையில் சிவகார்த்திகேயன் பல மாற்றங்கள் செய்ததாக எழுந்த தகவல்களும் உண்மை தான் போல என சகட்டு மேனிக்கு விமர்சனங்கள் எழுந்தது. 


மாவீரன் படம் வெளியாகி கிட்டதட்ட 2 வாரங்கள் ஆகிய நிலையில், 60 கோடிக்கும் மேலாக வசூலைப் பெற்றதாக் சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த படம் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை குறிப்பிட்டு  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை குறிப்பிட்ட பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் “OVOP” என பதிவிட்டுள்ளார். இணைய உலகத்தை பொறுத்தவரை இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்பது வேறுவிதமாக தகாத வார்த்தையாக  சொல்லப்படுகிறது. இதனால் கொந்தளித்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ப்ளூ சட்டைக்கு எதிராக சரமாரியான கருத்துகளை தெரிவித்துள்ளனர். 


ஏற்கனவே மாவீரன் பட வெளியீட்டை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட, அதற்கு தயாரிப்பாளர் அருண் விஸ்வா இடையே வார்த்தை மோதல்  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.