எக்ஸ்ட்ரீம் (Xtreme Movie) பட பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்  நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான  ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi) கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் அளித்தார்.


‘தமிழ் மொழிய உணர்ந்து பேசறேன்’


தமிழ் சினிமாவில் பிற மொழி நடிகைகளின் ஆதிக்கம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ரச்சிதா, “நான் வேறு ஒரு மாநிலத்தில் இருந்து வந்திருக்கேன், வேற மாநிலத்தில் இருந்து வந்தவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கறாங்கனா, அப்போ எனக்குமே முன்னுரிமை கொடுக்கக்கூடாது தான். ஆனா தமிழ் எனக்குப் பிடிக்கும், அதனால உணர்ந்து பேசறேன்.


வாழ்க்கையையே எனக்கு தமிழ்நாட்டில் அமைஞ்சதால நான் அந்த மொழிய பேசி தான் ஆகணும். மத்தவங்களும் தமிழ் பேசக் கத்துக்கிட்டு பேசணும். தமிழ் வராதுனு சொல்றத விட இங்க வந்து தமிழ் பேசக்கத்துக்கிட்டு நல்ல பேர் வாங்கினா ஓகே” என்றார்.


‘நடிப்ப பாக்க மாட்டேங்கறாங்க!’


“சின்னத்திரை டூ பெரியதிரைக்கு மாற்றிக்கொண்டு வருவது கஷ்டம், அதை எப்படி செய்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இந்தக் கேள்விக்கு பதிலளித்த ரச்சிதா, “சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வருவது கஷ்டம் தான். தமிழிலேயே நிறைய நல்ல நடிகைகள் இருப்பாங்க. நிறைய பெண்கள் இருக்காங்க. ஆனால் மொழி பிரச்னை இருக்கவங்களுக்கும் சில நேரங்களில் கிடைக்குது. நான் சொல்றது என்னனா, எங்கள மாதிரியான ஆட்களுக்கும் வாய்ப்புகள் கொடுங்க. போட்டி ரொம்ப கடினமா இருக்கு. நாம நல்லா நடிக்கறோம்னு பார்ப்பவர்கள், அந்தக் கண்ணோட்டம் கம்மியா இருக்கு” என்றார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாய்ப்பு வருமா?


அப்போது பிக்பாஸ் மூலம் வந்த வாய்ப்புகள் பற்றி கேள்வி எழுப்பப்பது. அதற்கு பதிலளித்த ரச்சிதா, “பிக்பாஸூக்கும் நம் கரியருக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லை. நான் இத ஏற்கெனவே நிறைய முறை சொல்லி இருக்கேன். பிக்பாஸ்ங்கறது வாழ்க்கைப் பாடங்கள தான் கத்துக்கொடுக்கும். நம்ம வாழ்க்கைல இப்படி இப்படி இருக்கலாம், ஒரு சூழல எப்படி கையாளுவது, மன உறுதி இவற்றையெல்லாம் தான் பிக்பாஸ் கத்துக்கொடுக்கும். கரியரை பிக்பாஸ் உருவாக்கிக் கொடுக்காது. நமக்கு உள் இருக்கும் திறமையை தான் நாம் கொண்டு வர முடியும்” என்றார்.


“தொடர்ந்து பிக்பாஸ் மூலம் வாய்ப்புகள் கிடைப்பதாக கமல்ஹாசன் சொல்கிறாரே?” என்றும், பிக்பாஸ் மூலம் ஆண்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வருவதாகவும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். 


மேடை வேறு, திறமை வேறு


அதற்கு பதிலளித்த ரச்சிதா, “டேலண்ட் தான் சார் எல்லாமே. திறமை இல்லாம வாய்ப்பு கொடுனா எதுவுமே கிடைக்காது. திறமை வச்சிட்டு நல்லா டான்ஸ் ஆடுவது, பாடுவதுனு இதலாம் செய்தால் வாய்ப்புகள் வரும். பிக்பாஸ் ஒரு மேடை. அது பல பேர் பார்க்கும் நிகழ்ச்சி. இந்தப் பொண்ணுக்கு வாய்ப்பு கொடுத்தா நடிப்பா என ஒரு இயக்குநர் அதைப் பார்த்து நினைத்தால் வாய்ப்புகள் வரும். பிக்பாஸ் ஷோவுக்கு போய்ட்டு வந்தபின் வேறு மாதிரி நடிக்கிறேனா? இல்லை. முன்னாடி சரவண - மீனாட்சி நடிச்சேன், வேறு பல சீரியல்கள் செய்துள்ளேன். அதைப் பார்த்துவிட்டு தான் எனக்கு வாய்ப்பு வரும், ஆனால் பிக்பாஸ் பார்த்துவிட்டு வாய்ப்பு வராது. கமல் சார் சொன்னதை தெளிவாக சொல்லுங்கள்” என்றார்.


“கமல் சார் இந்த மேடை உங்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும்னு சொல்றாரே?” என பத்திரிகையாளர் விடாமல் கேள்வி எழுப்பிய நிலையில், “நம்ம கைல தான் அது இருக்கு. “ரச்சிதா, பிக்பாஸ் விட்டு வந்துட்டி நீ என்ன செய்ற?” எனக் கேட்டால் அது என் கையில் தான் இருக்கு. அதை நாம குருட்டுத்தனமாக நம்ப முடியாது. அவர்களால் ஒரு மேடை தான் அமைத்து தர முடியும். நிறைய பேருக்கு அந்த உத்வேகம் இருக்கு” என்று பேசினார்.