தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஒரு வீட்டிற்குள் போட்டியாளர்களை தங்க வைத்து அவர்களில் 100 நாட்கள் வரை போட்டியில் நீடித்து வெற்றி பெறும் நபருக்கு சாம்பியன் பட்டம் அளிக்கப்படுவதுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
பிக்பாஸ்:
கடந்த சில சீசன்களாகவே பிக்பாஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், இந்த சீசனில் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக பிக்பாஸ் காமன் மேன் என்ற பிரிவின் கீழ் சாதாரண மக்கள் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
காமன்மேன் போட்டி:
ஆனால், இந்த பிரிவில் அவர்கள் போட்டியாளர்களை தேர்வு செய்யும் முறை பார்ப்பவர்களை வருத்தம் கொள்ள வைத்துள்ளது. அதாவது, ஒரு இடத்தில் கலைத்து போடப்பட்டுள்ள நாற்காலிகளை எடுத்து அமர வேண்டும் என்று வைக்கப்பட்ட போட்டியில் ஏராளமான போட்டியாளர்களை உள்ளே அனுப்பி, அவர்களுக்குள் நாற்காலியை எடுத்து அமர்வதே போட்டி.
ஆனால், இதில் இருக்கை கிடைத்தால் தான் நாற்காலி கிடைக்கும் என்று ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டனர். மற்றொரு போட்டியில் இரண்டு வேனை நிறுத்தி அதில் அமர வேண்டும் என்று போட்டி நடத்தினர். தங்களுக்கு சீட் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்களும், பெண்களும் செருப்புகளும், தங்கள் அணிகலன்களும் கீழே விழுவதைக் கூட கவனிக்காமல் பதறியடித்து ஓடினர்.
சாமானியன் என்றால் கேவலமா?
இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. சாமானிய மக்கள் என்றால் இவ்வளவு கேவலமாக நடத்துவதா? இதுவே பிரபலங்கள் என்றால் இப்படித்தான் தேர்வு செய்வீர்களா? என்று அந்த தொலைக்காட்சியையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் சமூக வலைதளங்களில் பலரும் கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.
சாதாரண மனிதர்கள் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை மிகவும் மோசமாக நடத்தும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குவியும் கண்டனங்கள்:
ஏற்கனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இவர்கள் வைக்கும் போட்டிகள் வன்முறையையும், வக்கிரத்தையும் தூண்டும் விதமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை கடந்த சில சீசன்களாக தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதிக்கும் இதற்காக கண்டனங்கள் குவிந்து வருகிறது.
khgf
