நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்திருந்த “ருத்ரன்” படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ருத்ரன் படம் 


பொல்லாதவன், ஆடுகளம், நய்யாண்டி, ஜிகர்தண்டா, டைரி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இவர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள  ‘ருத்ரன்’  படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள ருத்ரன் படம் தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 


முன்னதாக ருத்ரன் படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அம்மா பாசத்தை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. காஞ்சனா படத்திற்கு பிறகு சரத்குமாரும், ராகவா லாரன்ஸூம் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பிற மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் பெற்றிருந்தது. 


டப்பிங் உரிமம் தொடர்பான பிரச்சினை


இதற்காக பைவ் ஸ்டார் நிறுவனம் ரூ.12.25 கோடிக்குஒப்பந்தம் செய்திருந்திருந்தாகவும், முன்பணமாக ரூ.10 கோடி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மேலும்  ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை பைவ் ஸ்டார் நிறுவனம் ரத்து செய்ததாக ரெவன்சா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டனர். ரிலீசுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் ஏற்கனவே ருத்ரன் படத்தின் முன்பதிவு தொடங்கியிருந்ததால் ராகவா லாரன்ஸ் ரசிகர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். 


இதனைத் தொடர்ந்து ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி படக்குழு  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு நேற்று செய்யப்பட்டது. அந்த மனுவில் நாளை மறுதினம் (ஏப்ரல் 14) படம் வெளியாக உள்ளதால், இதனை அவசர வழக்காக நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஃபைவ் ஸ்டார்ஸ் கிரியேசன்ஸ் நிறுவனம்  தரப்பில், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளின் டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து திட்டமிட்டபடி ருத்ரன் படம் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.