ஷோ ஸ்டார்ட் பண்ண உடனே, “எல்லோரும் ஆன்லைன் கிளாஸைப் பத்தி சந்தோஷமும், கவலையும் பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில இதில் பெறுவதற்கு நிறைய இருக்கிறது என சொல்ல ஆசைப்படுகிறேன்” அப்படின்னு சொன்னார் கமல்ஹாசன். ஆன்லைன் க்ளாஸை ஆதரிக்கிறாரா கமல்ஹாசன்?னு அப்படியே டிங்குன்னு ஒரு டைட்டில் அலாரம் அடிச்சுது நமக்கு.


”வீடெல்லாம் ஜம்முன்னுதான் இருக்கு ஆனா ஜிம்மில்லன்னு ஏற்கெனவே சொன்னேன். அம்மிக்கல்லையெல்லாம் எடுத்து நிரூப் எக்சர்ஸைஸ் பண்றாரு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னு நிரூபித்த நிரூப்புக்கு வாழ்த்துக்கள்னு” சொன்னாரு கமல்.. (என்ன ஆண்டவரே இன்னைக்கு ஒரே ரைமிங்கா இருக்கு) கவித கவித. கேஸ் மூலமாவும் பேச முடியும்னு நிரூபிச்ச ப்ரியங்காவுக்கு வாழ்த்துக்கள்னு சொன்னதும் அக்மார்க்கான அஹ்ஹாஹா சிரிப்பைச் சிரிச்சாங்க ப்ரியங்கா. டீ போட்றது நல்ல கலை சிபின்னு சொல்லிட்டு, ”டீ நல்லா போடுங்க.. அது உங்களை எங்கேயோ கொண்டு போய் சேர்த்துடும்னு” சொன்னார். மோடிஜி ஃபேன்ஸுக்கு கேட்டுச்சுங்களா? வீட்டுக்குள்ள துப்பாக்கிச் சத்தம் கேக்க காரணமா இருந்தது அபிஷேக்தான்னு சொல்லிட்டு, “நாட்டுக்குள்ள கேக்கும், பாத்திருக்கோம். நாமெல்லாம் தூங்கிட்டு இருந்தோம்னா எங்கே வேணா துப்பாக்கிச்சூடு நடக்கும்”னு சொன்னார். என்ன இன்னைக்கு ஆண்டவர் அரசியல் கடாவா வெட்டிக்கிட்டு இருக்காரு? இருக்கட்டும் இருக்கட்டும்..



மனம் இருந்தால் மார்க்கபந்துன்னு சொல்ற மாதிரி, கட்டாந்தரையும் எக்சர்ஸைஸ் க்ரவுண்டுன்னு, யோகா மேட்டா மாத்திட்டாங்க அக்‌ஷரா. மகளைப் பிரிந்து கவலைப்படாதீங்க அபினய். சீக்கிரம் சரியாகிடும் என்றார் கமல். சொந்த வீடு வாங்கப்போறேன்னு சூளுரை பண்ண இசைவாணிக்கு வாழ்த்துக்களும் சொன்னார். குறட்டைக்கே பயப்படுற தாமரையே, இனிமேதான் அரட்டையே இருக்குன்னு சொன்னார். திரைக்கதை தேடும் பேய்க்கதை மன்னன் ராஜுவையும் பாராட்டினார். மதுமிதாவின் கொஞ்சும் குரலையும் பாராட்டினாரு. இசைவாணிக்கு வறுமை இருந்திருக்கலாம்.. இனிமே எந்தத் தடையும் இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு, ஆடியன்ஸைப் பாத்தும் இருக்கக்கூடாதுன்னு சொன்னார். குழந்தைத் திருமணம் எவ்வளவு கொடுமையானதுன்னு புரிய வெச்சதுக்காக சுருதியைப் பாராட்டினாரு.


பாதியில் விட்டுவிட்டுப் போனவர்கள் இருப்பவர்களுக்கு துக்கத்தைக் கொடுத்துட்டு போற விஷயம் நடந்த பவனிக்கு தன் ஆறுதலைச் சொன்னாரு. ஜெர்மனி கான்செண்ட்ரேஷன் கேம்ப்ஸ்ல வாழ்ந்தவங்க கூட அதுக்கப்புறம் வாழ்க்கையை வாழ்ந்தாங்க. இது மட்டும்தான் ஒரே சான்ஸ். வாழ்க்கையை வசப்படுத்திக்கோங்க. தற்கொலை வேண்டாம்னு மெசேஜ் கொடுத்தார். தற்கொலை எண்ணம் வந்தா பேசிடுங்கன்னு சொன்ன மதுமிதாவையும் கொண்டாடிட்டார்.



”என் திறமையை மதிக்காத உலகத்துல நான் ஏன் வாழணும்னு, எனக்கும்கூட தற்கொலை எண்ணம் வந்திருக்குன்னு” சொன்ன கமல், அப்படி ஒரு அசட்டுத்தனத்தை நான் பண்ணியிருந்தா, எவ்வளவு பெரிய மேடைகளையும், புகழையும் இழந்திருப்பேன் என்று பொட்டில் அடித்தது யோசிக்க வைத்தது.


எல்லாத்தையும் வெறும் திரைக்கதையாவே பார்த்த ராஜு பாய்க்கு செல்லமா ஒரு குட்டு வெச்சு, ”எல்லாருடைய கதையையும் புரிஞ்சுக்க அவங்களுடைய இடத்தில் நாம இருக்கணும். ஒருவேளை உங்களுக்கு அது புரியாம இருக்குறதுக்கு உங்க வயசு கூட காரணமா இருக்கலாம்”னு சொன்னார் கமல். பேய்க்கதை மன்னன் ராஜு பாய்க்கு அப்போ கூட புரியல. நான் டிஸ்லைக் கொடுத்ததாலதானே இப்போ கமல் சார் கதைசொல்ல சான்ஸ் கிடைச்சுதுன்னார். திருந்தமாட்டீங்க ராஜூபாய் திருந்தவே மாட்டீங்க.


ஐய்க்கி பெர்ரி, மதுமிதாவுடைய தமிழ் பத்தி பேசுன கமல், நானும் ரசிகன்னுக்கு சொல்லி குஷிப்படுத்தினார். தமிழ்மொழியையும், தாய்மொழியில படிக்குறதுடைய அவசியத்தையும் மறுபடி மறுபடி சொல்லிக்கிட்டே இருந்தார் கமல். இன்னைக்கு எபிசோட் ஒரு ட்ரீட்தான்.