Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக நித்தம் ஒரு சண்டை தினம் முட்டல் மோதல் என சென்று கொண்டிருக்கிறது. பிரதீப் ஆண்டனி எவிக்‌ஷன், பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து டீம் சண்டை என பல காரணங்களால் சென்ற வாரம் பிரளயமான பிக்பாஸ் வீட்டை, வீக் எண்ட் எபிசோடில் கமல் சற்றே கூல் டவுன் செய்தார்.


நடிகர் கமல்ஹாசனின் வீக் எண்ட் எபிசோட் பல தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை என்றாலும், பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் அமைதியை வரவழைத்தது. இந்நிலையில் இந்த வாரம் கொஞ்சம் போட்டியாளர்கள் அடக்கி வாசித்து வருகின்றனர். இந்த வாரம் பூர்ணிமா, அக்‌ஷயா, சரவண விக்ரம், விசித்ரா, ரவீணா, மணி சந்திரா, ஆர்.ஜே.பிராவோ, கானா பாலா ஆகிய போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் சென்ற வாரம் போல இல்லாவிட்டாலும் இந்த வாரம் ஆங்காங்கே முட்டல், மோதல் தொடர்ந்து தான் வருகிறது. அதன்படி நேற்று விஷ்ணு - அக்‌ஷயா இடையே கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முட்டிக் கொண்டது. “என்னையே டார்கெட் பண்றாங்க” என அக்‌ஷயா அழுத நிலையில், அவரை சக ஹவுஸ்மேட்ஸ்கள் ஆறுதல் படுத்தினர்.


இந்த வரிசையில் தற்போது விஷ்ணு - தினேஷ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கு காரணமாக அமைந்தது ஹவுஸ்மேட்ஸோ வேறு தனிப்பட்ட பிரச்னைகளோ இல்லை, பிக்பாஸ்! இந்த வார கேப்டன் தினேஷை கூப்பிட்டு பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்க் ஒன்று கொடுக்க அவரும் அதன்படி வெளியே சென்று ஹவுஸ்மேட்ஸிடம் கடுகடுவென பேசுகிறார்.


தொடர்ந்து விஷ்ணுவைப் பார்த்து தினேஷ் உனக்கு கொடுத்த பாத்திரத்தில் நடி என சொல்ல, வாய் தகராறு முற்றி தன்னை தினேஷ் டேய் என சொன்னதாகக் கூறி விஷ்ணு ஹை டெசிபலில் கத்துகிறார். தினேஷைப் பார்த்து வைல்ட்கார்டு நரி என விஷ்ணு சொல்ல, தினேஷ் அதற்கு அமுல் பேபி என விஷ்ணுவை அழைக்கிறார்.


 



இன்றைய எபிசோட் இப்படி பிக்பாஸ் பார்த்த நாரதர் வேலையோடு தொடங்கியுள்ள நிலையில் சீக்ரெட் டாஸ்க்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க, இந்நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்களும்,  பின் வைல்ட் கார்ட்என்ட்ரியாக 5 பேரும் என 23 பேர் இதுவரை பங்கேற்றுள்ளனர்.


இவர்களில் பவா செல்லதுரை, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா தேவி, அன்னபாரதி, யுகேந்திரன், ஐஷூ , பிரதீப் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்ஸன், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, அக்‌ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விசித்ரா, கானா பாலா, விஜே அர்ச்சனா ஆகியோர் பிக்பாஸ் போட்டியின் 45ஆவது நாளை எட்டியுள்ளனர்.