பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க குதூகலமாக இருந்து வருகிறது. காரணம் பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு மிகவும் விருப்பமான ஃப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. போட்டியாளர்கள் மிகுந்த ஆவலுடன் அவரவர்களின் குடும்பத்தாரை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். நேற்றைய தினம் அர்ச்சனா, பூர்ணிமா, விக்ரம் மற்றும் விஜய் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். 


 



அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்த தினேஷ் வீட்டில் இருந்து அவருடைய அம்மாவும் அப்பாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். அவர்களைப் பார்த்து மிகவும் உற்சாகமான தினேஷ் அவர்களைச் சென்று கட்டி அணைத்து கொண்டார். 


தினேஷின் அம்மா நேரடியாக விசித்திராவிடம் சென்று அழுதபடி கட்டியணைத்து கொள்கிறார். “எதுக்காக அழறீங்க?” என விசித்திரா கேட்டும் கூட, தினேஷின் அம்மா எந்த பதிலும் சொல்லாமல் கண்களை துடைத்துக்கொள்கிறார். பின்னர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிகொண்டு இருக்கிறார்கள். அப்போது தினேஷ் அப்பா அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவரின் காதல் கதையை போட்டியாளர்களிடம் சொல்லி குஷியாக்குகிறார். தினேஷின் அம்மா பூர்ணிமா மற்றும் மாயாவை கட்டியணைத்துக் கொண்டு, “எனக்கு உங்க இரண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும்” என்கிறார். 


தினேஷின் அப்பாவும் அம்மாவும் மிகவும் உற்சாகமாக அனைவருடன் பேசிக்கொண்டு இருக்க, தினேஷ் முழு சிந்தனையும் ரச்சிதாவின் வருகையை எதிர்பார்த்து தான் உள்ளது. ஏற்கெனவே தினேஷ் பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற்று அந்த டைட்டிலை ரச்சிதாவுக்கு பரிசளிப்பேன் என மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



தினேஷ் ஒரு பக்கம் மனக்கோட்டை கட்ட மறுபக்கம் ரச்சிதாவோ தனது இன்ஸ்டாகிராம் மூலம் விசித்திராவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்ட் பகிர்ந்துள்ளார். "fighten" என விசித்திராவின் புகைப்படத்தை பகிர்ந்து ஆண்களை எதிர்த்து தைரியமாக போராடுங்கள் என தன்னுடைய சப்போர்ட்டை விசித்திராவுக்கு தெரிவித்துள்ளார் ரச்சிதா. 


பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு போட்டியாளராக தினேஷ் என்ட்ரி கொடுத்த நாள் முதல் விசித்திராவுக்கும் தினேஷூக்கும் இடையே கடுமையான வாக்குவாதம், சண்டை நடைபெற்று கொண்டே இருக்கிறது. இருவரும் ஒருவித பகையுடனே பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தினேஷ் மீது இருக்கும் வெறுப்பால் அவருக்கு எதிராக இருக்கும் விசித்திராவுக்கு, ரச்சிதா ஆதரவு தெரிவித்துள்ளது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


தினேஷூக்கு வெளியில் என்ன நடக்கிறது என்பது தெரிய வாய்ப்பில்லை. இருப்பினும் ரச்சிதா தன்னுடன் மீண்டும் வந்த சேர்வார் என உறுதியாக நம்புகிறார் தினேஷ். இந்த நம்பிக்கை கை கொடுக்குமா? ரச்சிதா மனம் மாறுமா? தினேஷ் பிக் பாஸ் டைட்டிலை வெல்வாரா? பொறுத்து இருந்து பார்க்கலாம்.