Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 7வது நாளுக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் தொகுப்பாளர் கமல்ஹாசன் வீட்டின் முக்கிய நபருக்கு எச்சரிக்கை விடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அக்டோபர் 2 ஆம் தேதி முதல் எபிசோட்களாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 


நடப்பு  சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ராம் என பலரும் பங்கேற்றுள்ளனர்.  இந்த முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாடகர் யுகேந்திரன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


”ஆரம்பத்தில் இருந்தே ராங் ராங்கா போகுது” என்பதைப் போல முதல் நாளில் இருந்து இந்நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளுடன் தான் செல்கிறது. முதல் வார வீட்டின் கேப்டனாக விஜய் வர்மா இருக்கும் நிலையில், அவரும் பாரபட்சம் பார்க்காமல் சண்டைக்கு செல்கிறார். பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் என்றெல்லாம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படியான நிலையில் கடந்த 5வது நாளில் ஒளிபரப்பான எபிசோடில் மற்ற போட்டியாளர்களிடையே விஜய் வர்மா பேசிக் கொண்டிருந்தார். 


அப்போது, “பிரதீப் என்மேல் ஷூ காலுடன் இடிச்சிட்டு போனாரு. தீடிருன்னு எனக்கு கோபம் வந்துரும். நான் அடிச்சிருவேன். அப்புறம் மூக்கு, வாயெல்லாம் உடைஞ்சிரும். மேலும் என் மேல் ரொம்ப பாசமான பசங்க எல்லாரும் வெளியே இருக்காங்க. நீங்க வெளியே போனதும் சம்பவம் பண்ணிருவாங்க” என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஜய், கேப்டன் விஜய் வர்மாவிடம் சண்டைக்கு சென்றார். இது சக போட்டியாளர்களிடையே கடுப்பை ஏற்படுத்தியது. விஜய் பேச்சுக்கு சிலர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 


இந்நிலையில் இன்றைய எபிசோடில் விஜய் பேச்சை குறிப்பிட்டு பேசும் கமல் அவருக்கு மஞ்சள் அட்டை கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மொத்தமாக வன்முறை பேச்சுக்காக 3 முறை மஞ்சள் அட்டை வாங்கி விட்டால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என தெரிவித்துள்ளார். கமலின் குற்றச்சாட்டுக்கு மறுக்கும் வகையில் விஜய் பேச முயன்றபோது குறும்படம் போடட்டுமா என நக்கலாக கேட்கும் காட்சிகள் எல்லாம் இன்றைய ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.