பிக்பாஸ் தமிழ்  சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் அவரின் சம்பள விபரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துவிட்ட நிலையில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இதுவரை 76 நாட்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில் முதல் நாளில் 18 போட்டியாளர்களும், அதன்பிறகு ஒரு மாதம் கழித்து வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் 5 பேர் என மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 


இதில் தற்போது மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், மணி சந்திரா, ரவீனா, விஷ்ணு விஜய், விஜய் வர்மா,நிக்ஸன் ஆகிய 10 பேர் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நடிகர் கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் ஆளாக உள்ளே வந்தவர் தான் கூல் சுரேஷ். தன் மீதான பிம்பம் மாறும் என நம்பிக்கையோடு சொன்னவர், அதை இந்நிகழ்ச்சி மூலம் நிரூபித்தும் காட்டியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே எந்த போட்டியாளருடனும் அணி சேராமல் தவறுகளை தைரியமாக தட்டி கேட்டும் ரசிகர்கள் மனதை கவர்ந்து வந்தார். 






பிரதீப்புடன் நடந்த சண்டை, விசித்ராவுடன் நடந்த வாக்குவாதம் என சர்ச்சைகளிலும் கூல் சுரேஷ் சிக்கினார். மேலும் கடந்த வாரம் வீட்டை விட்டு தப்பி ஓட முயற்சித்தார். அவரை சமாதானப்படுத்தி நிகழ்ச்சியில் தொடர வைத்தனர். இந்நிலையில் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கூல் சுரேஷ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக பெற்ற சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாரம் ஒன்றிற்கு ரூ.1.5 லட்சம் சம்பளம் ஒப்பந்தம் செய்யப்பட்டு 10 வாரங்கள் இருந்ததற்காக ரூ.15 லட்சம் சம்பளம் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 


எது எப்படியோ தலைவன் கூல் சுரேஷை ஒவ்வொரு புதுப்பட ரிலீஸிலும் காணாமல் கடந்த 2 மாதங்களாக ரசிகர்கள் தவித்து போயினர். இனிமேல் அந்த கவலையில்லை. ‘வெந்து தணிந்தது காடு.. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த கூல் சுரேஷூக்கு வணக்கத்தை போடு’ என சமூக வலைத்தளங்களில் அவரை பலரும் வரவேற்றுள்ளனர்.