பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் முதல் வார கேப்டனாக செயல்பட்ட விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார். 


கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ரசிகர்களின் பேராதரவு பெற்ற சின்னத்திரை நிகழ்ச்சியாக பிக்பாஸின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நடப்பு  சீசனில் மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா என பலரும் பங்கேற்றனர். 


இதில் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், எழுத்தாளர் பவா செல்லத்துரை உடல்நலக்குறைவால் தானாகவே முன்வந்து வெளியேறினார். இதனால் 2வது வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் கேப்டனாக யுகேந்திரன் செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து நாமினேஷன் பட்டியலில் யாரும் எதிர்பாராதவிதமாக, பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத சம்பவமாக மாயா,அக்‌ஷயா, வினுஷா, நிக்ஸன், விஜய், பிரதீப், விசித்ரா, சரவண விக்ரம், ஐஷூ, மணி சந்திரா மற்றும் பூர்ணிமா என 11 பேர் இடம் பெற்றனர். 




இதனை சனிக்கிழமை (அக்டோபர் 21) எபிசோடில் கமல்ஹாசன் கூட ஆச்சரியமாக தெரிவித்தார். இப்படியான நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார். திருச்சியை சேர்ந்த விஜய் வர்மா பிக்பாஸில் கடைசி போட்டியாளராக உள்ளே வந்தார். முதல் வார கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் முதல் வாரத்தில் இருந்தே தொடர் சர்ச்சையில் சிக்கி வந்தார்.


குறிப்பாக சக போட்டியாளர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது, மிரட்டும் தொனியில் பேசி அதிர வைத்தார். குறிப்பாக ஷூ காலால் தன்னை இடித்த பிரதீப்பிடம், நீ வெளியே சென்றால் எனக்கு பிடித்தவர்கள் அவ்வளவுதான் சம்பவம் செய்து விடுவார்கள் என தெரிவித்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் அந்த வாரமே அவருக்கு கமல்ஹாசன் மஞ்சள் அட்டை கொடுத்து எச்சரிக்கை விடுத்தார். 


இந்த வாரம் நடைபெற்ற ஆக்ஸிஜன் டாஸ்க்கில் சக வீரர் பிரதீப்பை மல்யுத்த போட்டியில் போடப்படும் யுக்தியை பயன்படுத்தி அட்டாக் செய்தது ஒட்டுமொத்த சக போட்டியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், ரசிகர்கள் அளித்த ஓட்டுகள் மற்றும் வீட்டில் நடந்து கொண்ட முறை ஆகியவற்றின் அடிப்படையில்  விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார்.