ஆரம்பிக்கலாமா என கமல் கேட்க, விரைவில் என்ற பிக் பாஸ் அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது


இந்திய திரையுலகின் முன்னணி மற்றும் பிரபலமான நடிகர் கமல்ஹாசன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால், கமல்ஹாசன் திரைப்படங்களில் நடிப்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக குறைத்துக்கொண்டார். ஆனாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார்.


இந்த தொடரின் 4 சீசன்களை கமல்ஹாசன் இதுவரை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசனுக்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்துக்கான ப்ரோமாவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. டெவில் சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என கமல் கேட்க, விரைவில் என்ற அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது



இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனுக்கான நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து, சுனிதா கோகாய், கனி திரு உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். பிக்பாஸ் 5 சீசனுக்கான வீடு சென்னையில் உள்ள இ.வி.பி. படப்பிடிப்பு நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சித் தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றது மூலமாக நடிகைகள் ஓவியா, லாஸ்லியோ, ஷிவானி, நடிகர்கள் ஆரி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் மிகவும் பிரபலமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கமல்ஹாசன் தற்போது மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் வகையில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர், கமல்ஹாசன் சட்டபை தேர்தலில் கடந்த ஓராண்டாக தீவிரமாக இருந்த நிலையில், தற்போது சட்டசபை தேர்தல் நிறைவுற்ற பிறகு அவர் மீண்டும் திரையுலகில் தீவிரமாகி இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் பட எதிர்பார்ப்பில் உள்ள அவரது ரசிகர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த புகைப்படங்களும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.