`பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்குகொண்டு புகழ்பெற்ற கேப்ரியல்லா தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகவுள்ளார். இவர் ஏற்கனவே திரைப்படங்களிலும், விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கேபி என்று செல்லமாக அழைக்கப்படும் கேப்ரியல்லா சார்ல்டன் தன் சிறு வயதிலேயே விஜய் தொலைக்காட்சியின் `ஜோடி ஜூனியர்’ என்ற குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் பங்கேற்றவர். தொடர்ந்து அவர் `ஏழாம் வகுப்பு சி பிரிவு’ என்ற பள்ளிக் குழந்தைகள் பற்றிய தொடரிலும் நடித்தவர். விஜய் தொலைக்காட்சியின் `ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் பங்கேற்ற கேப்ரியல்லா, அதில் வெற்றியாளராகவும் மகுடம் சூட்டினார். 


கேப்ரியல்லா இன்ஸ்டா அக்கவுண்ட் பெர்பார்மன்ஸ்....






சின்னத்திரை மட்டுமின்றி, தன் சிறு வயதிலேயே சினிமாவிலும் நடித்துள்ளார் கேப்ரியல்லா. தனுஷ் நடித்து, ஐஷ்வர்யா தனுஷ் இயக்கிய `3’ படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்தவர் கேப்ரியல்லா. தொடர்ந்து அவர் சரத்குமார் முன்னணி நடிகராக நடித்த `சென்னையில் ஒரு நாள்’ படத்திலும், சமுத்திரகனி இயக்கி, நடித்த `அப்பா’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் கேப்ரியல்லா. 



இந்நிலையில், கடந்த ஆண்டு `பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றார் கேப்ரியல்லா. சுமார் 90 நாள்கள் வரை, பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த கேப்ரியல்லா பலராலும் தன் குணத்திற்காகப் பாராட்டப்பட்டார். தான் ஒல்லியாக இருப்பதால் உருவக் கேலிக்கு ஆளானதாகக் கூறிய கேப்ரியல்லா, `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தன் வயதை விட மூத்த போட்டியாளர்கள் அனைவருக்கும் கடுமையான சவாலாக இருந்தார். மேலும், இறுதி விளையாட்டில் பங்குபெறாமல், 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வெளியேறினார் கேப்ரியல்லா. அதன் பிறகு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய `முரட்டு சிங்கிள்ஸ்’ என்ற போட்டியிலும் பெண் நடுவராகப் பங்கேற்று பலரையும் தன்னை ரசிக்க வைத்தார் கேப்ரியல்லா.  


தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் வெளிவரும் `பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற பிக் பாஸ் போட்டியாளர்களுக்கான நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். 



தற்போது விஜய் தொலைக்காட்சியில் `ஈரமான ரோஜாவே’ சின்னத்திரை தொடரின் இரண்டாவது சீசனில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் கால் பதிக்கிறார் கேப்ரியல்லா. `ஈரமான ரோஜாவே’ தொடர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெகு பிரபலமானது. 2018 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்தத் தொடரில் கதாநாயகியாக பவித்ராவும், கதாநாயகனாக திரவியம் ராஜ்குமாரும் நடித்திருந்தனர்.


கேப்ரியல்லா சினிமாவில் நடிக்கவுள்ளதாகக் கூறியிருந்த நிலையில், அவர் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.