பிக் பாஸ் வீட்டில் சொந்தக் கதை சொன்ன நடிகர் சஞ்சீவை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி 78 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. டிசம்பர் 21 ஆம் தேதி நிகழ்ச்சியில் நடிகர் சஞ்சீவ் மற்றும் அமீர் தங்களின் லைஃப் எக்ஸ்பீரியன்ஸைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. 


அப்போது பேசிய சஞ்சீவ் சரியாக 8.47 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், நான் பிறந்தது சென்னையில் தான். ஒரே ஒரு அக்கா. சின்ன குடும்பம். எனக்கு விஜய்யோடு சேர்த்து 6 பேர் நண்பர்களாக இருக்கிறோம். பள்ளியில் இருந்து சிலர் நண்பர்கள். என் அப்பா பணி ஓய்வு பெற்ற பின்னர் என் அக்கா நடிப்பில் ஆர்வம் காட்டினார். என் அக்கா சிந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கும் ஒரு வாய்ப்பு வந்தது.


நானும் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தேன். பின்னர், என் அப்பா மறைவுக்குப் பின் குடும்ப சுமை என் மேல் வந்தது. என் அக்காவின் திருமணமும் முறிந்துவிட்டது. அவளுக்கு ஒரு மகள் இருந்தார். எல்லோரையும் பார்க்க நான் வேலையில் சேர்ந்தேன். கிரெடிட் கார்டு பிரிவில் வேலையில் சேர்ந்தேன். நன்றாக சம்பாதித்தேன். அக்கா மகளும் நன்றாகப் படித்துக் கொண்டிருந்தார்.




அப்போது தான் தமிழகத்தில் சுனாமி தாக்கியிருந்த நேரம். சின்னத்திரை சார்பில் நிதித் திரட்டிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென அக்கா மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். காலையில் அழகாக கருப்பு சுடிதாரில் வந்த என் அக்கா அங்கே ஆடையில்லாமல் கிடந்தார். மருத்துவர்கள் அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சைகளை அளித்துக் கொண்டிருந்தனர். அக்கா இறந்துவிட்டார். அவரது மறைவு எனக்கு பெரும் இழப்பு என்று சொன்னபோதே சஞ்சீவ் கண் கலங்கினார்.


பின்னர் எனக்கு தொழிலில் திரையில் நல்ல முன்னேற்றம் வந்தது. நன்றாக சம்பாதித்தேன். ப்ரீத்தியை திருமணம் செய்தேன். ப்ரீத்தி எனக்குக் கிடைத்த பொக்கிஷம். அவர் என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையே நன்றாகப் பார்த்துக் கொண்டார். என் அக்கா மகள் திருமணத்திற்காக மொத்த சேமிப்புப் பணத்தையும் மனமார எடுத்துக் கொடுத்தார். ப்ரீத்தி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். 


அதன் பின்னர் நிறைய சீரியல், நிறைய படங்கள் என நடித்தாகிவிட்டது. பிக்பாஸ் தான் எனக்கு நல்ல பிரேக்கிங் கொடுத்தது. இன்றைக்கு இரண்டு குழந்தைகள், குடும்பம், தொழில், நண்பர்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இதுதான் என் வாழ்க்கை. ஒருமுறை எனக்கு நல்ல பெரிய பேனரில் ஒரு படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. பெரிய நடிகை ஒருவரும் ஒப்பந்தமானார். ஆனால் அப்போது தான் பணமதிப்பிழப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.


இவ்வாறு அவர் தனது கதையைப் பகிர. அட மோடி யார் வாழ்க்கையில் எல்லாம் விளையாடி இருக்கிறார் பாருங்கள் என நெட்டிசன்கள் கூறி கலாய்த்து வருகின்றனர்.