கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2022 ஜனவரியில் தொடங்கிய இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கத் தொடங்கியது. உள்ளூர் நிர்வாகமும், கல்லூரி நிர்வாகமும், மாணவிகளின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றும் பலன் கிடைக்கவில்லை. ஹிஜாப் அணிவதற்கான உரிமை தொடர்பாக மாணவிகள் உயர் நீதிமன்றத்தை அணுகியநிலையில், தற்போது மூன்று நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.


இதற்கிடையில், சில இந்துத்துவ குழுக்கள், இந்து மாணவர்களை காவி சால்வை மற்றும் மேல்துண்டு அணிந்து வருமாறு வலியுறுத்தின. கர்நாடகாவில் மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒன்று ஹிஜாபை ஆதரிக்கிறது, மற்றொன்று அதை எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில் அரசியலும் சேர்ந்துவிட்டதால், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் நடிகை ஃபரீனா ஆசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.



தமிழ் டிவி ரசிகர்களுக்கு ரியாலிட்டி ஷோக்களையும் தாண்டி பல ஆண்டுகளாக மிக பெரிய பொழுதுபோக்காக இருந்து வருகின்றன சீரியல்கள். மக்கள் மனதை கவர்ந்த முன்னணி சேனலாக இருந்து கொண்டிருக்கிறது ஸ்டார் விஜய் டிவி. இந்த சேனலில் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கென்று பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.


அந்த சீரியலில் வில்லியாக நடிக்கும் நடிகை ஃபரினா ஆசாத் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார், "ஹிஜாப் போட்டுக்கொள்வதோ அல்லது பொட்டு வைத்து கொள்வதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்கள் மனைவியை இந்த வேலை செய், அந்த வேலை செய் என்று ஆர்டர் போட உங்களால் அனுமதிக்க முடியாது இல்லையா" என்று காட்டமாகவும், அதிரடியாகவும் கூறி இருக்கிறார்.



சீரியல் பீக்கில் சென்று கொண்டிருக்கும்போதே குழந்தைப் பிறந்ததால், ஜெயிலுக்கு செல்வதுபோல காட்சிகள் உருவாக்கப்பட்டு, சில வாரங்களுக்குப் பின், உடனடியாக பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மீண்டும் திரும்பி நடிக்கத் தொடங்கினார் ஃபரினா. இவர் பிரசவத்திற்கு சென்றபோது கூட, இனி வில்லி ரோலில் வெண்பாவாக ஃபரினா நடிக்க மாட்டார். ரோஷினிக்கு பதில் வேறு நடிகையை மாற்றியதைப்போல இவருக்கு பதிலாகவும் வேறு நடிகை வில்லி வேடத்தில் நடிக்க வருவார் என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால் இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஃபரீனா.


பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான ஃபரினா ஆசாத், கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் சீரியலில், பவானி கேரேக்டரில் அபியின் தோழியாக நடிக்கிறார். கூடிய விரைவில் திரைப்படங்களிலும் காணலாம் என்று கூறுகிறார்கள்.