யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் திரைப்படம் தான் தற்போதைய 'டாக் ஆஃப் த டவுன்'.


இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். வரும் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


வித்தியாசமான சர்ச்சை


பாலிவுட் பாட்ஷாவாகவும் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டும் வலம் வரும் நடிகர் ஷாருக்கான், இறுதியாக பிரம்மாஸ்திரா, லால் சிங் சத்தா, ராக்கெட்ரி உள்ளிட்ட படங்களில் கௌரவப் பாத்திரங்களில் தான் தோன்றியிருந்தார்.


2018ஆம் ஆண்டு தான் ஹீரோவாக நடித்து வெளியான ’ஜீரோ’ படத்துக்குப் பிறகு வேறு படங்களில் ஷாருக்கான் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் தன் ஆதர்ச ஜோடியான தீபிகாவுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், அவரது ரசிகர்களிடையே படம் குறித்து எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.


இந்நிலையில், முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘பேஷரம் ரங்’ பாடல் இணையத்தில் வெளியாகி கலக்கல் ஹிட் அடித்தது. தீபிகா இந்தப் பாடலில் உச்சக்கட்ட கவர்ச்சியால் ரசிகர்களை திணறடித்த அப்ளாஸ் அள்ளிய நிலையில், மற்றொருபுறம் இந்தப் பாடல் குறித்த வித்தியாசமான சர்ச்சைகள் எழத் தொடங்கின.


பாஜகவினரை புண்படுத்திய காவி நிற உடை


அதன்படி முன்னதாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர்  நரோத்தம் மிஸ்ரா பாடலில் காவி மற்றும் பச்சை நிறத்திலான நீச்சல் உடைகளில் தீபிகா தோன்றியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு பாடல் வரிகள் மோசமாக இருப்பதாகவும் விமர்சித்தார்.


அவரைத் தொடர்ந்து பாஜக எம்பிக்கள் கிரிராஜ் சிங், பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிடடோர் தீபிகாவின் காவி உடையைக் கண்டித்தும், ஷாருக்கானை முகம்மது நபி பற்றியும் இஸ்லாம் பற்றியும் படம் எடுக்கும்படி சவால் விடுத்தும் சாடி வருகின்றனர்.


மும்பை காவல் நிலையத்தில் புகார்


இந்நிலையில், மும்பை, சக்கினாகா காவல் நிலையத்தில் தீபிகா படுகோனின் காவி நிற உடை குறித்து புகார் ஒன்று  பெறப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், ஷாருக்கான், தீபிகா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதியும்படியும் கோரப்பட்டுள்ளது.


 






படத்தின் கதையிலோ, முன்னதாக வெளியான டீசரிலோ சர்ச்சைக்குரிய விஷயங்கள் இல்லாத நிலையில், தீபிகாவின் காவி உடையை மையப்படுத்தி வித்தியாசமாக வெடித்துள்ள இந்த சர்ச்சையால் நொந்து கொள்கின்றனர் பாலிவுட் வட்டாரங்கள்!