Behind The Song வரிசையில் இன்று நாம் நெஞ்சினிலே படத்தில் இடம் பெற்ற “மதராஸ் தோஸ்து” பாடல் பற்றி காணலாம். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் பயணப்பட்டு வருகிறார். அவரது கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இப்படியான நிலையில் 32 ஆண்டுகால விஜய்யின் சினிமா வாழ்க்கையில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் பங்கு என்பது மிக முக்கியமானது. மகனை தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு நகர்த்தியவரும் அவர் தான். ஒருபக்கம் விஜய்யின் உழைப்பு என்றாலும், மறுபக்கம் எஸ்.ஏ.சி. பங்கு என கொள்ளலாம். 


விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்பதில் தீவிர அக்கறை காட்டியதும் அவர் தான். ஆனால் சூழல் விஜய்யை அரசியல் களத்திற்குள் இழுத்து கொண்டு வந்து விட்டது. எம்ஜிஆர், ரஜினியை தொடர்ந்து ரசிகர்களுடனான தொடர்பை பாடல் வரிகள் கொண்டு சேர்த்தவர் விஜய். அதில் மிக முக்கியமான பாட்டு 1999 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சினிலே படத்தில் இடம் பெற்ற  “மதராஸ் தோஸ்து” பாடல் தான். இப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இப்படத்தில் இஷா கோபிகர், ஸ்ரீமன், சோனு சூட், மணிவண்ணன், நிழல்கள் ரவி என பலரும் நடித்திருந்தனர். நடிகை ரோஜா ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். தேவா இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை ரவிகுமார், விஜயன், பழனி பாரசி, ஏ.சி.ஜெய்ராம், வாலி, கலைக்குமார் என பலரும் எழுதியிருந்தனர். அதில் வாலி எழுதிய “மதராஸ் தோஸ்து” பாடல் முழுக்க முழுக்க விஜய்யின் எதிர்கால பயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இப்பாடலை கிருஷ்ண ராஜ், அனுராதா ஸ்ரீராம் இணைந்து பாடியிருப்பார்கள்.


இப்பாடலின் வரிகளில், 


மதராசி தோஸ்த் நீ
மனசால கோல்டு நீ
டீன் ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ


===


அண்ணன் இல்லா தம்பிக்கேல்லாம் அண்ணன் போல நீ
தம்பி இல்லா அண்ணனுக்கெல்லாம் குட்டி தம்பி நீ
பிள்ளை இல்லா குடும்பத்துக்கு செல்லப்பிள்ளை நீ
என்றும் எங்க வீட்டு பிள்ளை சிங்கக்குட்டி நீ


===

எல்லா தமிழர்களும் எந்தன் உறவுதான்
உங்கள் நலம் நினைக்கும் எந்தன் மனசுதான்
பொன்னள்ளி தந்தாலும் அன்புக்கு ஈடேது
அன்பான நண்பர்கள் இல்லாமல் நான் ஏது
நான் இமயம் அளவு வளர்ந்தால் கூட நன்றியை மறப்பேனா

என விஜய்யை புகழ்ந்து வரிகளை அடுக்கியிருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு பாட்டு விஜய்க்கு இருப்பது அவரது இன்றைய இளம் ரசிகர்கள் பலருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு விஜய்யின் வளர்ச்சியை மனதில் வைத்து இப்பாடலை எஸ்.ஏ.சி. வாலியை எழுத சொல்லியிருப்பார்.