அரை நிர்வாண போட்டோ போடும் நடிகைகளைப் பற்றித்தான் பேசுகிறேன் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பத்திரிகையாளரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமாகிய பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசுபவர். தற்போது பெரிதாக எந்த படத்திலும் நடிக்காத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வருகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் ஒரு சினிமா நட்சத்திரத்தின் கிசு கிசு தகவல் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும். 


மேலும், சினிமா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், வில்லங்கமாக கேள்வி எழுப்பி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஒருவழியாக்குவார் என்று பரவலாக பேச்சு உண்டு. 80களுக்கு முன்பிருந்தே அவர் சினிமாவில் வலம் வருபவர் என்பதால், அப்போதைய சினிமா பிரபலங்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை வைத்து, அவர்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார். சில நேரங்களில் உறுதி செய்யப்ப்படாத  தகவல்களையும் பார்த்தது போலவே சொல்லி சர்ச்சையில் சிக்குவதும் பயில்வானின் வேலை. இப்படி சினிமாத்துறையிலேயே சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருபவர் பயில்வான் ரங்கசாமி.


அண்மையில் பாடகி சுசித்ரா பற்றி அவர் பேசிய சர்ச்சை கருத்துகள் குறித்து சுசித்ராவும், பயில்வான் ரங்கநாதனும் பேசிய போன் உரையாடல் இணையத்தில் வைரலானது. இதனை ஒட்டி தனியார் யூடியூப் சேனல் ஒன்று பயில்வான் ரங்கநாதனிடம் பேட்டி எடுத்தது. இந்தப் பேட்டியில் அவர் தனது தவறுகளை எல்லாம் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.


அவருடைய பேச்சில் இருந்து:
நான் எல்லா பெண்களையும் பற்றி பேசுவதில்லை. அரை நிர்வாண போட்டோ போடும் நடிகைகளைப் பற்றித்தான் பேசுகிறேன். சுசித்ராவைப் பற்றி நான் பேசியது எல்லாம் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் பேசியவை. அவருக்கு தெம்பு இருந்தால் வழக்கு போடட்டும், போலீஸில் புகார் சொல்லட்டும். நான் அதை சந்திப்பேன். அவருக்கு இப்போது ஒரு வெளிச்சம் தேவைப்படுகிறது. அதனால் அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளார். 




நான் அப்படிப் பேசினேன், இப்படிப் பேசினேன் என்று சொல்லும் பெண்கள் ஏன் என் மீது புகார் சொல்வதில்லை. நடிகர் சங்கத்திலாவது புகார் சொல்லலாம் அல்லவா? சொல்ல மாட்டார்கள். காரணம் நான் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று அவர்களுக்கும் தெரியும். பெண்களை மட்டுமல்ல ஆண்களைப் பற்றியும் பேசியுள்ளேன். ரஜினி, தனுஷ் பற்றி பேசிய வீடியோக்கள் எல்லாம் பல மில்லியன் வியூவ்ஸ் பெற்றுள்ளது. சினிமாக்காரர்கள் பின்பற்றத் தகுந்தவர்கள் அல்ல. அவர்கள் ரியல் ஹீரோஸ் இல்லை என்பதை நான் மக்களுக்கு புரியவைக்கும் சேவை செய்கிறேன்.


இந்த சமூகப் பொறுப்பு மக்களிடம் ரீச் ஆகியுள்ளது. சினிமாத் துறையில் உள்ள சாக்கடையை நீக்குவதே என் நோக்கம். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. நான் பெண்களை மதிக்கிறேன். என் அம்மா, மனைவி பெண்கள் தானே. எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


நான் எல்லோரையும் பற்றி விமர்சனம் செய்யவில்லை. பெண்கள் ஆபாசமாக நடிக்காதீர்கள் எனத் தான் கூறுகிறேன். அரை நிர்வாண ஃபோட்டோ போடாதீர்கள். படுக்கைக்கு அழைத்தால் வாய்ப்புக்காக போகாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.


இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் பேசினார்.