விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியா காலேஜ் வர கூடாது என்றும் அதை பாட்டியிடம் சொல்லிவிடுவேன் எனவும் இனியா மிரட்டுகிறாள். பாக்கியாவும் பயந்ததுபோல காட்டிக்கொண்டு "போடி போய் சொல்லு. இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியும் அவங்களுக்கு உண்மை தெரிய போகுது அதனால் அத நீயே போய் சொல்லு" என நக்கலாக பாக்கியா சொல்ல எழில் சிரிக்கிறான். "அப்போ நீங்க இரண்டு பெரும் சேர்ந்து ஏதோ ஒரு பிளான் வைச்சு இருக்கீங்க" என சொல்கிறாள் இனியா. 



இனியா சத்தம் போடுவதை கேட்டு ஈஸ்வரி உள்ளே வந்து "அம்மாகிட்ட இந்த மாதிரி சத்தம் போட்டு பேச கூடாது இனியா. கோபம் நம்மை அழிச்சுடும் அதனால் இனிமே நீ எதுக்காகவும் கோபப்படக்கூடாது. கோபம் போகணும்னா தியானம் செய்" என ஈஸ்வரி இனியாவுக்கு அட்வைஸ் கொடுக்க பாக்கியாவும், எழிலும் கிண்டல் செய்து சிரித்து கொள்கிறார்கள். 


ஷாக் கொடுத்த ஈஸ்வரி :


எல்லாரும் ஒன்றாக சாப்பிடுகிறார்கள். அப்போது ஈஸ்வரி எனக்கு  பழங்கள் மட்டும் போதும் என்றதும் ராமமூர்த்தி "இது உனக்கு எப்படி பத்தும்" என கேட்கிறார். இதுவே எனக்கு தாராளம் என ஈஸ்வரி சொல்கிறார். மதியம் என்ன சாப்பிடுவீங்க என எழில் கேட்க "ரசம் சாதமும் காய்கறியும்" என சொல்கிறார். எழில் உடனே "அப்போ எங்களுக்கும் அதுதானா?" என கேட்கிறான்.  "இல்லடா உங்களுக்கு சிக்கன் செய்து வைச்சு இருக்கேன்" என பாக்கியா சொன்னதும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் ஈஸ்வரி சிவ சிவ என சொல்லி காதை மூடி கொள்கிறார். 


உங்களால் எப்படி ஒரு உயிரை கொன்று சாப்பிட முடியுது? இனிமே நீங்க யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என சொன்னதும் அனைவரும் எங்களால் முடியாது என்கிறார்கள். அதை நான் உங்களுக்கு தனியா சமைச்சு கொடுக்கிறேன் என பாக்கியா சொன்னாலும் அசைவம் சமைச்சுட்டு நீ எனக்கு சமைக்க வேண்டாம். நானே எனக்கு தனியா புது பாத்திரத்துல சமைச்சுக்குறேன் என்கிறார் ஈஸ்வரி. 



ட்ராமா போடும் எழில் பாக்கியா :


பாக்கியா காலேஜ் போவதற்கு ஈஸ்வரி சம்மதிக்க வேண்டும் என்பதற்காக எழில் ஒரு வீடியோவை ரெடி செய்துள்ளான். அதில் பாக்கியா மாமியாரை பற்றி புகழ்ந்து பேசியிருப்பாள். மேலும் மாமியார் ஒருவர் மருமகளை காலேஜ் அனுப்பிவைப்பது பற்றியும் பேசியிருப்பாள். அந்த வீடியோவை பார்த்த ஈஸ்வரி பயங்கரமாக திட்டுவார் என எதிர்பார்த்தால் அப்படியே வேறு மாதிரி பேசுகிறார். 


சம்மதம் சொன்ன ஈஸ்வரி :


நீ காலேஜ் போற விஷயத்தை என்கிட்டே சொல்லணும்னு உனக்கு தோணலையா பாக்கியா. நீ போய் படி நல்லா படிச்சு பெரிய ஆளா வா என ஈஸ்வரி சம்மதம் சொன்னதும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். எழில் ஈஸ்வரியையும் அப்படியே ஒரு பேட்டி கொடுக்க சொல்கிறான். எழில் - பாக்கியா ட்ராமா ஒர்க் அவுட் ஆனதால் கடுப்பான இனியா முகத்தை திருப்பி கொள்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி தொடர் முடிவுக்கு வந்தது.